தானே: ஜவுளிப்பூங்காவில் பயங்கர தீ விபத்து- தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
தானே: தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியில் உள்ள ஜவுளி ரெடிமேட் ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏணிகள் மூலம் 25 பேர் கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
பிவாண்டியில் உள்ள ஜவுளி உற்பத்தி தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று காலையில் கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள பவர்லூம் பகுதியில் தீ பிடித்துள்ளது. மளமளவென பரவிய தீ 4 வது மாடி வரைக்கும் கொழுந்து விட்டு எரிகிறது. தீ விபத்து ஏற்பட்ட உடன் சுதாரித்த தொழிலாளர்கள் மேற்புரத்திற்கு சென்று மொட்டை மாடியில் நின்று கொண்டு உதவி கோரினர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கும் தொழிலாளர்களை ஏணிகள் மூலம் மீட்டு வருகின்றனர். இதுவரை 25 தொழிலாளர்கள் வரை மீட்கப்பட்டுள்ளனர். தீயின் வேகத்தால் கரும்புகை ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சேதமதிப்பு எவ்வளவு என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications