வயிற்றில் இரட்டை குழந்தை... கணவரின் பாசமில்லை: பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
தானே: கர்ப்பமாக இருக்கும் தன்னிடம் கணவர் பாசமாக இல்லையே என்ற ஏக்கத்தில் ரயில்வே காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பெண் போலீஸ் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் நேற்று தானே ரயில் நிலைய வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
தானே ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாக பணிபுரிந்து வந்தவர் 29 வயது வைசாலி பிங்கட். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரயில்வே போலீஸ்காரரான விஜய் என்பவருடன் திருமணம் நடந்தது.
பொதுவாக இரவு பணி போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகளை மீண்டும் பொறுப்பாக வாங்கி வைப்பது வைசாலியின் வேலைகளில் ஒன்று. அதன்படி, நேற்று காலை 8.30 மணியளவில் துப்பாக்கிகளை வைக்கும் அறைக்குள் சென்ற வைசாலி கதவை உட்பக்கமாக பூட்டிக் கொண்டதாகத் தெரிகிறது.
வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தோழியான மற்றொரு பெண் போலீஸ், அறைக் கதவைத் தட்டியுள்ளார். உள்ளேயிருந்து எந்த பதிலும் வராததால், மற்ற போலீஸ்காரர்களின் உதவியோடு அந்த அறைக் கதவு உடைக்கப் பட்டிருக்கிறது.
அங்கே, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார் வைசாலி. அவரது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. கையில் துப்பாக்கியையும் பிடித்திருந்தார். அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடனடியாக வைசாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார். அதனைத் தொடர்ந்து வைசாலி தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீசார் நடத்திய சோதனையில் வைசாலி எழுதிய கடைசிக் கடிதம் ஒன்று சிக்கியது.
அதில் வைசாலி, ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை. நானே என் மரணத்தை தேடிக்கொண்டேன். என் வயிற்றில் இரட்டை குழந்தை வளர்ந்து வருகிறது. ஆனால் எனது கணவர் விஜய் என் மீது பாசம் இல்லாமல் இருப்பது எனது மனதை பாதித்துள்ளது' என்று எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, வைசாலியின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து வைசாலியின் கணவர் விஜயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.