சூடுபிடிக்கும் ஹரியானா தேர்தல் களம்.. 31 வேட்பாளர்களை அறிவித்த காங்., ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத்
சண்டிகர் : ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி 31 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. குறிப்பாக அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹரியானா மாநில சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் அம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

அக்டோபர் மாதம் 5ஆம் தேதி அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்த நிலையில் ஹரியானா பாஜக தனித்துப் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு எட்டப்படாததால் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் தனித்தனியே களம் காண்கின்றன. இதேபோல ஜனநாயக ஜனதா கட்சி ஆசாத் சாமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
தற்போதைய சூழலில் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி காங்கிரஸின் 31 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒலிம்பிக்கில் எடை பிரச்சனை காரணமாக வெளியேற்றப்பட்ட வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதை அடுத்து காங்கிரஸ் சார்பில் அவர் ஜுலானா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் ஹரியானாவின் முன்னாள் முதலமைச்சரான புபேந்தர் சிங் ஹூடா, கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வினேஷ் போகத்: ஒலிம்பிக் போட்டியில், உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்திய போகத், அனுமதிக்கப்பட்டதைவிட 100 கிராம் அதிக எடை இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தங்க பதக்கம் பறிபோனது. இந்நிலையில் வினேஷை காங்கிரஸ் கட்சியில் இணைத்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன.
இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. இப்படி இருக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹரியானா வந்திருந்த ராகுல் காந்தியை வினேஷ் போகத் சந்தித்தார். அதனை தொடர்ந்து இன்று அவர் காங்கிரஸில் இணைந்தார். இதனை உறுதி செய்யும் வகையில், ரயில்வே துறையில் தான் வகித்து வந்த பதவியை வினேஷ் போகத் ராஜினாமா செய்தார். இதனையடுத்தே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications