லவ் மேரேஜ்க்கு புதிய கட்டுப்பாடு! இனி பெற்றோர் சம்மதம் முக்கியம்.. குண்டை தூக்கி போட்ட குஜராத் அரசு
காந்திநகர்: காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதத்தை கட்டாயமாக்குவது குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக குஜராத் பாஜக முதலமைச்சர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். இதனால் அம்மாநிலத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் படேல் சமூக மக்கள் 12-14 சதவிகிதம் வரை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலங்களாக நடக்கும் காதல் திருமணங்களில் படேல் சமூக மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக, அதாவது தங்கள் வீட்டு பெண்/ஆண் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்/ஆணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி வருகின்றனர். இந்த திருமணத்திற்கு வீட்டில் ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் வீட்டை விட்டு வெளியேறி சென்று திருமணம் செய்து கொள்கின்றனர்.

இதே போல வெவ்வேறு சமூகத்தினரும் பாதிக்கப்படுவதாக சில சாதி தலைவர்கள் தொடர்ந்து சலசலப்புகளை எழுப்பிய நிலையில், இனி காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கட்டாயம் என்று புதிய விதிமுறையை கொண்டுவர ஆலோசித்து வருவதாக அம்மாநில பாஜக முதலமைச்சர் பூபேந்திர படேல் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற படேல் சமூகத்தினரின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது,
"கடந்த மார்ச் மாதம் பாஜக எம்எல்ஏ ஃபதேசின் சவுகான் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல், காதல் திருமணத்திற்காக பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி செல்லும் போக்கை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினார். எனவே காதல் திருமணங்களில் பெற்றோரின் சம்மதத்தை காட்டாயமாக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவெடுத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
இது அம்மாநிலத்தில் இளைஞர்களிடையே புதிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணங்களில் சாதிய ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சகட்டு மேனிக்கு விளையாடுகின்றன. பெரும்பாலான காதல் திருமணங்கள் இதன் காரணமாகவே நின்று போகிறது. மறுபுறம் வீட்டுக்கு பயந்து காதல் வேண்டாம் என்று ஒதுக்கினால் அப்பெண்ணை காதலனே கொலை செய்கிறான். அதேபோல பெற்றோரை மீறி நடக்கும் திருமணங்கள் ஆணவ கொலைகளில் முடிவடைகிறது.
இந்நிலையில் இந்த காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் அவசியம் என்பது குறித்து அம்மாநில அரசு ஆய்வு செய்ய திட்டமிட்டிருக்கிறது. இது காதல் திருமணங்களை செல்லாததாக்கிவிடும் என்று இளைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல பாஜக அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ கெடவாலா ஆதரவளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications