ஷூட்டிங் ஆர்டர்.. பற்றியெரியும் மணிப்பூர்.. சுற்றி வளைத்த ராணுவம்.. முழு கட்டுப்பாட்டை கையிலெடுத்தது
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்த நிலையில், தற்போது ராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் மணிப்பூர் மாநிலத்தில் இதுபோன்று வன்முறை சம்பவம் ஏற்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களை விட அதிக அளவில் அதாவது 53 சதவிகிதம் அளவில் மைத்தேயி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பழங்குடி சமூக மக்கள் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை

ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தலின்போது மைத்தேயி சமூக மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதாக பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. இதனையடுத்து தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மைத்தேயி சமூக மக்கள் போராட்டங்களை நடத்த தொடங்கினர். இது கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து ஒரு கட்டத்தில் அரசுக்கு நெருக்கடியாக மாறியது.
பாஜக அரசும் வேறு வழியின்றி மைத்தேயி மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறியது. ஆனால் இதற்கு பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் கடந்த மாதம் 19ம் தேதி நீதிமன்றம் இந்த கோரிக்கையின் மீது பாஜக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இது மாநிலத்தில் இரு தரப்பு மக்களிடையே இருந்த கொதிநிலையை மேலும் அதிகரித்து. இப்படி இருக்கையில் தங்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் பேரணி நடத்த திட்டமிட்டனர்.
பழங்குடி மாணவர் சங்கம் மணிப்பூர் (ATSUM) சார்பில் புதன்கிழமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திட்டமிட்டதை போல சேனாபதி, உக்ருல், காங்போக்பி, தமெங்லாங், சுராசந்த்பூர், சண்டேல் மற்றும் தெங்னௌபல் என 7 மாவட்டங்களில் இந்த பேரணி நடைபெற்றது. ஆனால் இதற்கு போட்டியாக பழங்குடியினர் அல்லாதவர்களும் பேரணி நடத்தினர். இப்படியாக நடத்தப்பட்ட போட்டி பேரணியானது சுராசந்த்பூர் மாவட்டத்தில் சந்தித்துக்கொண்டபோது கலவரமாக வெடித்து. கத்தி, அருவா ஆகியவற்றைகொண்டு இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கிக்கொண்டனர். இதில் ஏராளமான வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

அதேபோல இரு தரப்பிலும் குறிப்பிட்ட அளவில் சிலர் உயிரிழந்தனர். நிலைமை கையை மீறி செல்வதை பார்த்த மாநில அரசு உடனடியாக ராணுவத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனையடுத்து 16 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டிருக்கிறார். அதாவது இந்த கலவரங்கள் குறித்து முதலமைச்சர் பிரேன் சிங்கை சந்திக்க பாஜக எம்எல்ஏ காரில் சென்றிருக்கிறார். இவர் பெர்சாவல் மாவட்டத்தின் தன்லோன் தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல கடந்த கால ஆட்சியில் பழங்குடியினர் துறையின் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
நேற்று முதலமைச்சரை சந்தித்துவிட்டு வரும் வழியில் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து விவரமறிந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்எல்ஏ ஒருவர் மீது வன்முறை குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு விளக்கமளித்துள்ள ராணுவம் மாநிலம் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், கலவரத்தை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இம்பால், சுராசந்த்பூர், பிஷ்ணுபூர், காங்போக்பி மற்றும் மோரே ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. தற்போதுவரை சுமார் 9000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications