கர்நாடக சட்டசபை நாளை காலை கூடும்.. ஆளுநர் அறிவிப்பு
கர்நாடக சட்டசபையை நாளை காலை 11 மணிக்கு கூட்டுமாறு ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டசபையை நாளை காலை 11 மணிக்கு கூட்டுமாறு ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாளை பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.
இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது சபாநாயகரின் பங்கு இதில் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது பாஜகவை சேர்ந்த கே.ஜி. போப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கர்நாடக சட்டசபையை நாளை காலை 11 மணிக்கு கூட்டுமாறு ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாளை காலை நடக்கும் முதல் கூட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு புதிய சபாநாயகர் எம்எல்ஏ பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இந்த நிகழ்வு உணவு இடைவேளை வரை நடைபெறும். அதன்பின் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இடைப்பட்ட நேரத்தில் எம்எல்ஏக்களுடன் மற்ற கட்சி உறுப்பினர்கள் பேசாத வகையில், டிஜிபி பாதுகாப்பு அளிக்கப்படும்.