அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது மக்களின் அடிப்படை உரிமை! நீட் வழக்கில் சுப்ரீம்கோர்ட் கருத்து
டெல்லி: நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அமைதியான வழியில் போராட்டம் நடத்துவதற்கும், எதிர்ப்பை காட்டுவதற்கும் அடிப்படை உரிமை உள்ளது என்று நீட் போராட்டங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் மாணவி அனிதாபிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்ற நிலையிலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற இயலவில்லை. இதனால் மருத்துவ படிப்பு கைநழுவி போன விரக்தியில், கடந்த 1ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சியினர், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் என பல தரப்பினரும் பல்வேறு வகையிலான போராட்டங்களை தினமும் நடத்தி வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

பொது நல வழக்கு
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜி.எஸ்.மணி, ஒரு பொது நல வழக்கு தொடுத்தார். தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ரும், சட்ட விரோதமான போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார்.

தலைமை நீதிபதி அமர்வு விசாரணை
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜி.எஸ்.மணி நேரில் ஆஜராகி வாதிட்டார். இருப்பினும், தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தங்களுடைய எதிர்ப்பை அமைதியான முறையில் போராட்டம் மூலம் வெளிப்படுத்த நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

குழப்பம்
ஆனால் போராட்டங்கள் நடத்த மொத்தமாக தடை விதிக்கப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியாகின. சட்டம்-ஒழுங்கு கெடாமல் போராட்டங்கள் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியது பிறகுதான் தெளிவானது. இது தொடர்பாக நீதிபதிகள் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதில் முக்கியமான அம்சங்கள் இவைதான்.

சட்டம்-ஒழுங்கு
மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டிய கடமை தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு உண்டு. இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துகிற வகையில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு பதிவு செய்வதை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உரிமை உள்ளது
அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது, அரசை விமர்சிப்பது என்பதில் கோர்ட் தலையிடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த கூடாது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அமைதியான வழியில் போராட்டம் நடத்துவதற்கும், எதிர்ப்பை காட்டுவதற்கும் அடிப்படை உரிமை உள்ளது. ஆனால் அது வன்முறை வகையில் அமையக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications