தொழிற் வளர்ச்சியில் உத்வேகம்! அசாமில் ரூ.18000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்.. அசத்தும் மோடி!
திஸ்பூர்: இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரூ.18000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
பிரதமரின் பயண திட்டத்தின்படி, அவர் நேற்று மாலை 4 மணியளவில் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள தேஸ்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். இதனையடுத்து, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்திற்கு சென்றுள்ளார். அங்கு தேசிய பூங்காவின் அஸ்ஸாம் போலீஸ் விருந்தினர் மாளிகையின் கோஹோராவில் பிரதமர் மோடி இரவு தங்கினார். இன்று காலை, பூங்காவிற்குள் சஃபாரி சென்றார்.

சஃபாரி முடித்து மதியம் 1:30 மணியளவில் ஜோர்ஹாட் திரும்பிய அவர், ஹோலோங்கா பத்தரில் புகழ்பெற்ற அஹோம் போர் வீரர் 'லச்சித் போர்புகானின்' 84 அடி உயர சிலையை திறந்து வைத்தார். பின்னர் போதாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, புதிதாக கட்டப்பட்டுள்ள டின்சுகியா மருத்துவ கல்லூரியை திறந்து வைத்தார். மேலும் சிவசாகர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல்லை நாட்டியுள்ளார்.
ஏற்கெனவே அசாம் மாநிலத்தில் ரூ.27000 கோடி மதிப்பில், டெஸ்லா நிறுவனத்திற்கு தேவையான செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று, கவுகாத்தி சுத்திகரிப்பு ஆலை மற்றும் டிக்பாய் சுத்திகரிப்பு ஆலைகளின் விரிவாக்கத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். அதேபோல பாரௌனியில் இருந்து கவுகாத்தி வரை செல்லும் ரூ.3,992 கோடி மதிப்பிலான பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களின் தொழிற் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் பெரிய அளவில் கைகொடுக்கும் என்று பாஜகவினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications