26 பேரை பலி கொண்ட நக்சல்களின் வெறித்தனமான தாக்குதலின் பின்னணி இதுதானாம்!
பாதுகாப்புப் படையினர் மீது நக்சல்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதன் பகீர் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 26 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் பகீர் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ரிசர்வ் படையினர் அங்குள்ள மோசமான சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களைச் சுற்றி வளைத்த 300க்கும் மேற்பட்ட நக்சல்கள்,சரமாரியாகச் சுட்டனர்.

இந்த தாக்குதலை எதிர்பார்க்காத சிஆர்பிஎப் வீரர்களில் 26 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் நக்சல்கள் தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாலை வசதியில் மும்முரம்
சத்தீஸ்கர், பீகார், மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களில் மொத்தம் 5,412 கிலோமீட்டர் தொலைவில் வனப் பகுதிகளில் சாலைகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை விரும்பாத நக்சல்கள் மொத்தமுள்ள 44 மாவட்டங்களிலும்,படை வீரர்களுக்கும் அம்மாநில அரசுகளுக்கும் அவ்வப்பொழுது எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர்.
இதன் எதிரொலியாகவே, நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சாலை வசதிகள் தரமாக அமைக்கப்பட்டுவிட்டால், அந்தப் பகுதிகள் பள்ளிகள், கல்லூரிகள்,மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என்று நகர்ப்புறமயமாகிவிடும் என்பதால் நக்சல்கள் எதிர்க்கின்றனர். மேலும் நவீன வசதிகள் தங்கள் ஆதிக்கம் நிறைந்துள்ள பகுதிகளில் ஏற்படுத்தப்படுவதை நக்சல்கள் எப்போதும் விரும்பியதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரிசர்வ் படையினர் உதவியுடன் சாலைகள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,நக்சல்கள் தாக்குதல் நடந்துள்ளது. இதனையடுத்து சாலை அமைக்கும் பணியில் இப்போதைக்கு ஈடுபடவேண்டாம் என்று சிஆர்பிஎப் முடிவு செய்துள்ளது. இதுதான் நக்சல் தாக்குதல்களின் நோக்கமும் கூட என்கின்றன பாதுகாப்பு படை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications