தென்மேற்கு பருவமழை அடுத்த 2 மாதங்களுக்கு எப்படி இருக்கும்? இந்திய வானிலை மையம் முன்னறிவிப்பு!
தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 95% இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 95% இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதம் 29ம் தேதி கேரளாவில் தொடங்கியது. தொடக்கத்தில் சிறிது தொய்வு அடைந்து காணப்பட்ட நிலையில், ஜூன் மாதம் இறுதியில் பருவமழை தீவிரமடைந்தது.
இதனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம், உத்தரப் பிரதேசம், சட்டிஸ்கர், ஹரியானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பை விட அதிகமான மழை பொழிவு ஏற்பட்டது.

தமிழகத்திலும் வெளுத்த மழை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது.

ஆகஸ்ட், செப்டம்பர்
தென்மேற்கு பருவமழையின் அளவு கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான மாநிலத்தில் சராசரிக்கும் அதிகமான மழை பொழிவு இருந்தது. இந்நிலையில், நடப்பு ஆகஸ்ட் மற்றும் வரும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதத்தில் அதன் தாக்கம் இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது முன்னறிவிப்பு
ஏற்கனவே, நடப்பாண்டு ஜூனில் துவங்கும் தென் மேற்கு பருவமழை 96% முதல் 104% வரை இருக்கும் என்று தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் இரண்டாம் கட்ட நீண்ட கால முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய வானிலை மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை குறித்த 2ம் கட்ட நீண்ட கால முன்னறிவிப்பில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில், 95 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சராசரி மழையளவு
மேலும், கடந்த இரண்டு மாதங்களில் கேரளா, கர்நாடகா, ஒடிசா, தெலங்கானா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த ஆண்டிற்கான சராசரியான மழைப்பொழிவு முழுவதும் கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications