மோடி அலை வீசவில்லை.. பாஜகவுக்கு 200 இடங்களே கிடைக்கும்.. மமதா பானர்ஜி பேச்சு
Recommended Video

கொல்கத்தா: நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அதிகபட்சம் 200 இடங்களே கிடைக்க வாய்ப்புள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று திரிணாமுல் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, கர்நாடகாவில் காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணிக்கு பிறகு, 5 மாநில தேர்தலில் சொற்ப எண்ணிக்கையில் இடங்களை பாஜக கைப்பற்றி வருவதாக கூறினார்.

மேலும், நாட்டு மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு வெளியிடப்படும் கருத்துக் கணிப்புக்களின் படி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 193 தொகுதிகளில் 5-10 இடங்களை கூட பாஜக போராடி பெற வேண்டியதாக இருக்கும் என கூறினார்.
மோடி அலை ஒன்றும் தற்போது வீசவில்லை எனவும் தமிழகத்தில் அதிமுகவைத் தவிர மற்ற யாருடனும் கூட்டணி வைக்காமல் பாஜக தேர்தல் சந்திப்பதாகவும் மம்தா பானர்ஜி அப்போது குறிப்பிட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில், 71 இடங்களை வென்ற பாஜகவுக்கு இந்த தேர்தலில் 20-25 இடங்களே கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறினார். சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், 44 சதவிகித வாக்குகள் அந்த கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த சதவிகிதமானது 2014 ல் மோடி பெற்ற வாக்குப் பங்கினை விட 2 சதவிகிதம் அதிகமாகும் என்றார்.
அதேநேரம், 135 இடங்களில் பாஜக நல்ல ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், 65 இடங்களில் மோசமான இழுபறி உடன்தான் வெற்றி பெறும் என்றும் மமதா பானர்ஜி கணித்துள்ளார்.
காங்கிரஸ் வெற்றிக்கு முன்பே, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 30 க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக வெல்ல வாய்ப்பில்லை என்று மமதா பானர்ஜி கணிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications