மாதம் ரூ. 15,000 சம்பளம்.. வேலைக்கு ஆள் வைத்து திருடிய கொள்ளைக் கும்பல்.. ராஜஸ்தானில் கைது!
ராஜஸ்தான் மாநிலத்தில் மாத சம்பளத்துக்கு ஆள் வைத்து சிலர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் : மாத சம்பளத்தில் படிப்பறிவில்லாத இளைஞர்களை வேலைக்கு வைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருசக்கர வாகனங்கள், மொபைல்கள், லேப்டாப்கள் போன்றவை அதிகளவில் திருடு போகும் சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனால் திருடர்களைப் பிடிக்க அம்மாநில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களே இந்த திருட்டுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அப்போது, ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில், ஒரு வீட்டில் சந்தேகத்திற்குரிய வகையில் சிலபேர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் விசாரணையில் அவர்கள் தேடப்பட்டு வரும் கொள்ளையர்கள் எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டில் பதுங்கியிருந்த ஆறு பேரைக் கைது செய்தனர்.
மேலும், அந்த வீட்டில் இருந்து மொபைல்கள், லேப்டாப்கள், தங்க சங்கிலிகள், மோட்டார் கைக்கிள்கள் போன்றவையும் கைப்பற்றப் பட்டன. கைதானவர்கள் கொடுத்த தகவலின்படி, அந்த கொள்ளை கும்பலின் தலைவன், ஆஷிஷ் மீனாவையும் போலீசார் கைது செய்தனர்.
ஆஷிஷ் மீனாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதாவது, கொள்ளையடிப்பதற்காக, வேலையில்லாத, படிப்பறிவில்லாத இளைஞர்களை ஆஷிஷ் தேர்வு செய்துள்ளான். இவர்களுக்கு, மாதம், ரூ 15 ஆயிரம் ரூபாய் சம்பளமும் வழங்கி உள்ளான். இவ்வாறு சம்பளத்திற்கு ஆள் வைத்து அவன் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளான்.
தொடர்ந்து ஆஷிஷ் மற்றும் கைது செய்யப்பட்ட ஆறு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை இல்லாதவர்களைக் குறி வைத்து அவர்களைத் திருட்டு சம்பவங்களுக்கு கொள்ளைக் கும்பல் பயன்படுத்திய சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications