ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட்டில் 3வது கட்ட தேர்தல்- விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு!!
ஸ்ரீநகர்/ ராஞ்சி: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தலின் 3வது கட்ட வாக்குப் பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 87 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட்டில் உள்ள 81 தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. இவற்றில் சராசரியாக 70 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் 3-ம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் காலை 7 மணிக்கும், ஜார்க்கண்டில் காலை 8 மணிக்கும் வாக்குப் பதிவு தொடங்கியது. இரு மாநிலங்களிலும் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வரும் 16 தொகுதிகள் மற்றும் ஜார்க்கண்ட்டில் உள்ள 17 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் அதிகமாக வாக்குகள் பதிவாவதை தடுக்க அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 23 பேர் பலியாகினர்.
இன்று காலையிலும் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தினர் என்றாலும் அம்மாநில மக்கள் தீவிரவாதிகள் அச்சுறுத்தலுக்கு பயப்படவில்லை. காலைமுதலே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
வாக்குச் சாவடிக்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இன்று தேர்தல் நடந்து வரும் பாராமுல்லா, பட்காம், புல்வாமா ஆகிய 3 மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த வாரம் தாக்குதல் நடந்த ஊரி பகுதியில் 3 மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட்டில் இன்று வாக்குப் பதிவு நடந்து வரும் கோடர்மா, பார்கதா ஆகிய இரு மாவட்டங்களும் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்ததாகும். இதனால் அங்குள்ள அனைத்து வாக்குச் சாவடிகளும் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்களின் ஆர்வம் காரணமாக முதல் கட்டத்தேர்தல்கள் போல 3-ம் கட்ட தேர்தலிலும் அதிகமான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வருகிற 14-ந் தேதி 4-ம் கட்ட தேர்தலும், 20-ந் தேதி 5-ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.













Click it and Unblock the Notifications