மீண்டும் திமுக- காங். கூட்டணி? ராகுலுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு!
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் உறவே இல்லை என்று திமுக கூறிவிட்டது. இந்த நிலையில் திமுக அணியில் 'கூட்டணி' தூதுவராக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திடீரென காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது திமுக பொதுக்குழு எடுத்த முடிவு. இதை தொடர்ந்தும் திமுகவில் மு.க. ஸ்டாலின் தரப்பு வலியுறுத்துகிறது.
ஆனால் கனிமொழி, தயாநிதி, மு.க. அழகிரி ஆகியோர் காங்கிரஸுடன்தான் கூட்டணி அமைத்தாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். திமுக பொதுக்குழுவில் தீர்மானமாக முடிவெடுத்த பின்னரும் கூட கனிமொழி முயற்சியில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

காங்- உறவு இல்லை- ஸ்டாலின் உறுதி
அப்போதும் கூட ஸ்டாலின், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுதான் இறுதியானது என்றார். பின்னர் ராஜ்யசபா தேர்தலின் போதும் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு தீவிர முயற்சிகள் ஸ்டாலின் எதிர் தரப்பினரால் முடுக்கிவிடப்பட்டது.

ராஜ்யசபா தேர்தல்- ஸ்டாலின் பிடிவாதம்
ஜி.கே.வாசனை ராஜ்யசபா வேட்பாளராக நிறுத்தி திமுகவின் ஆதரவைப் பெற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் மு.க. ஸ்டாலினோ பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை மீற முடியாது என்று கூறிவிட்டார். இதனால் ஜி.கே.வாசனின் எம்பி கனவும் திமுக- காங்கிரஸ் கூட்டணி கனவும் கானல் நீரானது.

தொலைபேசி உரையாடல்களால் நெருக்கடி
இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கலைஞர் டிவி தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது திமுகவுக்கும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது.

ராகுல்- திருமா சந்திப்பு
இந்நிலையில் டெல்லியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

கூட்டணி தூதர் திருமா
திமுக சார்பில் ஏற்கெனவே கூட்டணிக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியிருந்தார் திருமாவளவன். லோக்சபா தேர்தலில் திமுகவின் "கூட்டணி தூதராக" திருமாவளவன் செயல்பட்டு வரும் நிலையில் ராகுலுடனான சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுலுடன் பேசியது என்ன?
இருப்பினும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலத்தின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இக்கூட்டத் தொடரில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த மசோதா; எஸ்சிஎஸ்பி எனப்படும் தாழ்த்தப்பட்டோர் நலன்கள் தொடர்புடைய துணைத் திட்டம், டிஎஸ்பி எனப்படும் பழங்குடியினர் துணைத் திட்டம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்.
தனியார் துறை வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு, இந்திய ஆழ்கடல் பகுதியிலேயே தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வகை செய்யும் படகுகள், மீன் பிடி வலைகளை மத்திய அரசே வழங்க வேண்டும்;

பொது அரசியல் நிகழ்வுகள்..
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணியிடங்களில் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்; ஜெனீவாவில் வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற ஆதரவு தரும்படி ராகுலிடம் மனு அளித்தேன். மற்றபடி பொதுவான அரசியல் நிகழ்வுகளை மட்டும் பேசினோம் என்றார்.

மீண்டும் திமுக- காங் கூட்டணி?
ஆனால் இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்காக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் தொலைபேசி உரையாடல் நெருக்கடி மற்றும் தேமுதிக கூட்டணியில் இல்லாதது போன்ற காரணங்களால் காங்கிரஸுடன் கை கோர்க்க வேண்டிய நிலையில் திமுக இருக்கிறது. இதனாலேயே ராகுல் காந்தியை திருமாவளவன் சந்தித்தார் என்கின்றன டெல்லி அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications