2 குழந்தைகளுக்கு மேல் வேண்டாம்: 40 கிராமத்தினருக்கு காப் பஞ்சாயத்து உத்தரவு
லக்னோ: உத்தர பிதரதேசத்தில் உள்ள காப் பஞ்சாயத்து ஒன்று 40 கிராமத்தினரை 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள பைஸ்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ் சவுத்ரி. காப் பஞ்சாயத்து தலைவர். இந்நிலையில் அவர் பஞ்சாயத்தை கூட்டி ஷாம்லியில் உள்ள 40 கிராமத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை அந்த பகுதியில் வசிக்கும் இந்துக்களும், முஸ்லீம்களும் வரவேற்றுள்ளனர்.
கடந்த 27 ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவராக இருக்கும் சவுத்ரி கூறுகையில்,
அதிக குழந்தைகளை பெற்றால் வறுமை தான் ஏற்படும். அதனால் தான் 2 குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு 40 கிராமத்தினரை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
ஷாம்லியில் பல ஏழைக் குடும்பங்கள் உள்ள நிலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை பலரும் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் பெண் ஒருவர் பஞ்சாயத்தின் உத்தரவு குறித்து கூறுகையில், எனக்கு ஆண் குழந்தை பிறக்கும் வரை நான் பிள்ளை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.