தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் இந்து-இந்துத்துவா-தேச விரோதிகள்... சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்.
டெல்லி: தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் இந்து, இந்துத்துவா மற்றும் தேசவிரோதிகள் என்று பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவ ராகேஷ் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக இளைஞர்கள் சிலர் மீதும், மத்திய பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக 2 முஸ்லிம் பெண்கள் மீதும் அண்மையில் மிக கொடூரத் தாக்குதலை இந்துத்துவாதிகள் நடத்தினர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் இத்தகைய தாக்குதல்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. இதனால் இதுவரை மாட்டிறைச்சி விவகாரத்திலோ பசு பாதுகாப்பு குறித்து பேசாமல் இருந்த பிரதமர் மோடி திடீரென கருத்துகளை தெரிவித்திருந்தார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் நடத்துபவர்களை சமூக விரோதிகள் என மோடி சாடினார். இத்தகைய போலி பசு பாதுகாவலர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார். அத்துடன் தலித்துகளுக்கு பதிலாக என்னை சுடுங்கள் என்றும் பிரதமர் மோடி உருக்கமாக பேசியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த திடீர் பேச்சு தொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தலித்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் தேசவிரோதிகள் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவரான ராகேஷ் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலித்துகளுக்காக ஆர்.எஸ்.எஸ்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் ராகேஷ் சின்ஹா கூறியதாவது:
தலித்துகளுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுபவர்களுக்கு பிரதமர் மோடி சரியான தருணத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலித் சமூகத்தினரை பிற மக்களுடன் இணைந்து வாழ்வதற்கான பல்வேறு செயல்திட்டங்களை ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் மேற்கொண்டு வருகிறது.
உனா சம்பவத்துக்கு கண்டனம்
குஜராத்தின் உனாவில் மாட்டிறைச்சி தோலை உரித்ததற்காக தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நிச்சயம் இந்துத்துவா கொள்கையை பாதுகாப்பவர்களாக இருக்கமாட்டார்கள். உனா சம்பவத்துக்கு முதலில் கண்டனம் தெரிவித்தது ஆர்.எஸ்.எஸ்.தான்.
இந்து சமூகம் மீதான தாக்குதல்
தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் தேசத்தின் மாண்பை சீர்குலைக்கிறார்கள். யார் ஒருவர் தலித்துகள் மீது தாக்குதல் நடத்துகிறார்களோ அவர்கள் இந்து சமூகத்தின் மீதுதான் தாக்குதல் நடத்துவதாக அர்த்தம்.
இந்து- இந்துத்துவா- தேசவிரோதிகள்
தலித்துகள் மீது தாக்குதல் நடத்துவர்கள் இந்துவிரோதிகள். அவர்கள் இந்துத்துவா விரோதிகள். அவர்கள் இந்த தேசத்தின் விரோதிகள். தலித்துகள் இல்லாத இந்து சமூகத்தை கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
அறவழி பிரசாரமே...
அதே நேரத்தில் பசுவதை செய்வோரை மாநில அரசுகள் தடுப்பதில்லை. நாடு முழுவதும் சுமார் 30,000 சட்டவிரோத பசுவதை கூடங்கள் உள்ளன. பசுக்களைப் பாதுகாப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடக்கம் முதலே அறவழியிலான பிரசாரத்தையே மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு ராகேஷ் சின்ஹா கூறினார்.