பாரத் மாதா கீ ஜே என முழங்காதவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறட்டும்.. சொல்வது பாஜகவின் விஜய்வர்கீயா
கொல்கத்தா: பாரத் மாதா கீ ஜே என முழங்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலர் கைலாஷ் விஜய்வர்கீயா தெரிவித்திருக்கும் கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்தது முதலே மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் 'பாகிஸ்தானுக்கு ஓடிப் போய்விடுங்கள்' என்பதை இந்துத்துவாதிகள் சொல்லத் தவறுவதில்லை.

இந்நிலையில் பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்தை அனைவரும் முழங்க வேண்டும் என்று பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்தார். இதற்குப் பதிலடியாக, எனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும், பாரத் மாதா கீ ஜே என முழங்க மாட்டேன் என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஓவைஸி கடந்த திங்களன்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொதுச்செயலர் கைலாஷ் விஜய்வர்கீயா, பாரத் மாதா கீ ஜே முழக்கத்தை எழுப்ப விரும்பாதவர்களுக்கு இந்த நாட்டில் வசிக்க உரிமையில்லை என்று நான் கருதுகிறேன். அவர்கள் வேறு ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்லட்டும் என்றார்.
இதனிடையே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்தை எழுப்ப மறுத்த ஓவைஸிக்கு எதிராக பொதுநலன் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications