ம.பி - 15 பயணிகள் எரித்துக் கொலை: - 3 பேருக்கு தூக்கு... பஸ் அதிபருக்கு ஆயுள் தண்டனை
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்துக்குள் 15 பயணிகளை தீவைத்து எரித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர்,கண்டக்டர், கிளீனருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செத்வா மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக சாய் கிருபா டிராவல்ஸ் பஸ் டிரைவருக்கும் மற்றொரு பஸ் டிரைவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் காரசாரமாக பேசிக் கொண்டனர்.
கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சாய் கிருபா பஸ் டிரைவர் அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றார். உடனே மற்றொரு பஸ் டிரைவரான தருண் சர்மா, கண்டக்டர் திலீப் சோனி, கிளீனர் ராஜ்குமார் ஆகியோர் பின் தொடர்ந்து சென்று அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தி பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். உடனே பஸ் தீப்பற்றி எரிந்தது.
உள்ளே அதிக அளவில் பயணிகள் இருந்ததால் ஜன்னல் வழியாகவும், கண்ணாடியை உடைத்துக் கொண்டும் கீழே குதித்தனர். இதில் 20 பயணிகள் காயமின்றியும், 7 பேர் தீக்காயத்துடனும் தப்பினார்கள். 15 பேர் வெளியேற முடியாமல் பஸ்சுக்குள்ளேயே எரிந்து கருகி மரணமடைந்தனர். சாதாரண தகராறுக்காக 15 பேரை எரித்துக் கொன்ற இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் பஸ் டிரைவர் தருண் சர்மா, கண்டக்டர் திலிப் சோனி, கிளீனர் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர். பெர்மிட் இல்லாமல் பஸ்சை இயக்கிய குற்றத்துக்காக பஸ் உரிமையாளர் நரேஷ் தோஷியும் கைது செய்யப்பட்டார். 4 பேர் மீதும் பர்வானி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டது.
இந்த வழக்கில் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்டு 15 பேரை எரித்துக் கொன்ற குற்றத்துக்காக பஸ் டிரைவர், கண்டக்டர், கிளீனர் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தேவேந்திர சோலங்கி தீர்ப்பு கூறினார். பஸ் அதிபருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.62 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
பஸ் எரிப்பில் பலியான 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் நேரில் பார்த்த 15 பேர் உள்பட 58 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
பஸ் ஊழியர்கள் 3 பேரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் அவர்கள் மீது கருணை காட்டி குறைந்த தண்டனை வழங்குமாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வக்கீல் வாதாடினார். அதை நிராகரித்த நீதிபதி, ஏதும் அறியாத அப்பாவிகளை கொன்றவர்களை மன்னிக்க முடியாது என்று கூறி தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications