பாதுகாப்பிற்கு தயார் ஆகுங்கள்.. காஷ்மீரில் குவிக்கப்படும் துணை ராணுவப்படை.. 3 முக்கிய காரணங்கள்!
காஷ்மீரில் தொடர்ந்து துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு வருவதற்கு பின் மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிகிறது.
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொடர்ந்து துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு வருவதற்கு பின் மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிகிறது.
காஷ்மீரை நோக்கி கடந்த சில நாட்களாக இந்திய ராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அங்கு 50 ஆயிரம் வீரர்கள் புதிதாக களமிறக்கப்பட்டு உள்ளனர்.
இனி வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக துணை ராணுவப்படை வீரர்கள் அங்கு களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சென்ற வாரம் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்ற பின்தான் அங்கு பாதுகாப்பு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் அவர் அங்கு தங்கி இருந்து முக்கிய ஆலோசனைகளை நடத்தினார். அங்கு முக்கிய அதிகாரிகள், ராணுவ வீரர்கள், உளவுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதற்கு பின் மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிகிறது.
முதல் காரணம்
அதன்படி முதலாவதாக காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பு ஒன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. மிக பெரிய தீவிரவாத தாக்குதல் நடக்க போவதாக உளவு தகவல்கள் வந்துள்ளது, இதுதான் பாதுகாப்பை பலப்படுத்த முதல் காரணம் ஆகும்.
அடுத்து காரணம்
அதேபோல் இந்த நடப்பு லோக்சபா கூட்ட தொடரில் மத்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ வை நீக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்படி நடக்கும் நிலையில் காஷ்மீரில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும். வன்முறைகள் அங்கு கைமீறி நடக்க வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்தவும் ராணுவம் குவிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.
கடைசி காரணம்
அதேபோல் காஷ்மீரில் கடந்த ஆறு மாதமாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும். இதற்காக மத்திய அரசு தயாராகி வருகிறது. அக்டோபர் மாதம் காஷ்மீரில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள். அதற்கு முன் காஷ்மீரை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.