நண்டு பிடித்த முதியவரை கழுத்தை கவ்வி படகில் இருந்து காட்டுக்குள் இழுத்துச் சென்ற புலி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுந்தர்பான் காடுகளில் புலி ஒன்று நண்டு பிடித்துக் கொண்டிருந்த முதியவரை படகில் இருந்து காட்டுக்குள் இழுத்துச் சென்றது.

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு 24 பராகனாஸ் மாவட்டத்தில் உள்ள லாஹிரிபூரைச் சேர்ந்தவர் சுனில் மாஜ்ஹி(62). அவர் தனது மகன் ஜோதிஷ்(40) மற்றும் வளர்ப்பு மகள் மொலினாவுடன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள சிற்றோடையில் நண்டுகள் பிடிக்க படகில் செல்வது வழக்கம். அந்த சிற்றோடை அடர்ந்த சுந்தர்பான் காடுகளுக்குள் செல்லும்.
இந்நிலையில் வியாழக்கிழமை அன்றும் வழக்கம்போல் அவர்கள் மூவரும் படகில் ஏறி நண்டு பிடிக்க சென்றுள்ளனர். அவர்களின் படகு காலை 7 மணி அளவில் சுந்தர்பான் காட்டுப்பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்ட இடத்தை அடைந்தது. அப்போது ஏதோ சத்தம் கேட்க பயந்துபோன அவர்கள் படகை திருப்பினர்.
அந்த நேரம் ஒரு பெரிய புலி பாய்ந்து வந்து சுனிலின் கழுத்தை கவ்வி அவரை படகில் இருந்து இழுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றுவிட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
படகின் முன்புறம் ஜோதிஷ் இருக்க, நடுவில் சுனில் அமர்ந்திருக்க பின்புறம் மொலினா இருந்தார். புலி சுனிலை கடித்து இழுத்தபோது அவர்கள் அதை கம்பால் அடித்தும் அது சுனிலை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் புலி மனிதரை இழுத்துச் சென்று அவர் திரும்பாமல் இருந்தது இது ஒன்றும் முதல் முறை அல்ல.












Click it and Unblock the Notifications