தெலுங்கானாவுக்கு எதிராக திருப்பதியில் 48 மணி நேர முழு அடைப்பு... திருமலைக்கு மட்டும் பேருந்துகள் இயக்கம்!
திருப்பதி: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பதியில் நடைபெறும் முழு அடைப்பின் போது திருமலைக்கு மட்டும் பேருந்துகளை இயக்க போராட்டக் குழு ஒப்புக் கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானாவுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருப்பதியிலும், திருமலையிலும் ஆந்திரக் கூட்டமைப்புக் குழுக்கள் செப்டம்பர் 14,15 ஆகிய தேதிகளில் 48 மணிநேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.
இந்நிலையில் அரசு தரப்பிலிருந்து கேட்டுக்கொண்டதன் பேரில் திருமலைக்கு மட்டும் பேருந்துகளை இயக்க போராட்டக் குழுவினர் இசைந்துள்ளனர்.
இந்த 2 நாட்களும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல முன்னேற்பாடுகளை செய்துள்ளது. ரயில் நிலையத்திலிருந்து இலவச பேருந்துகள், பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால் முதலியவற்றை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.