திருப்பதியில் போராடிய பிஞ்சு உயிர்.. முதல்வர் ஜெகன் மோகனே நேரடியாக களமிறங்க.. திடீரென நடந்த அதிசயம்
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு உயிர் காக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளளது. இது திருப்பதி பத்மாவதி மருத்துவமனையில் நடந்த 10வது வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி லகரி என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவரை பல்வேறு மருத்துவமனைகளில் பரிசோதித்த பெற்றோர், இறுதியாக ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 6-ம் தேதி சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிறுமி லகரியை பரிசோதித்த ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார்கள். மேலும் சிறுமி உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். உடனடியாக இதயம் பொறுத்தினால் தான் குழந்தையை காக்க முடியும் என்ற நிலை இருந்தது. எவ்வளவு சீக்கிரம் இதயம் கிடைக்குமோ, அவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு நல்லது என்கிற நிலை இருந்தது.
இதையடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, பத்மாவதி குழந்தைகள் இதய மையத்தின் மருத்துவர்கள், ஆந்திர அரசினுடைய ஜீவன் தான் திட்டத்தில் குழந்தையின் நிலையை உடனடியாக பதிவு செய்தனர். இதனிடையே கடந்த சில நாள் முன்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த 50 வயது முதியவர் ராஜேஸ்வர் ராவ் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
முதியவர் ராஜேஸ்வர்ராவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து 50 வயது முதியவர் ராஜேஸ்வர்ராவின் இதயம் திருப்பதியில் உயிருக்கு போராடிய 11 வயது சிறுமி லகரிக்கு வழங்குமாறு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பரிந்துரைத்தார். இதையடுத்து இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின் பேரில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து ராஜேஸ்வர்ராவின் இதயம் ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.பின்னர் முதியவர் ராஜேஸ்வர்ராவின் உடலில் இருந்து இதயம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஜேம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஸ்ரீகாகுளத்தில் தயார் நிலையில் இருந்த ஹெலிகாப்டர் மூலம் மின்னல் வேகத்தில் ராஜேஸ்வர்ராவின் இதயம், விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.தொடர்ந்து ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து அந்த இதயம் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் செல்வதற்கு என்றே ரேணிகுண்டா விமான நிலையம் டூ திருப்பதி ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் மருத்துவமனை வரை தயார் நிலையில் வைக்கப்பட்டு மின்னல் வேகத்தில் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து டாக்டர்கள் அந்த இதயத்தை அறுவை சிகிச்சை செய்து சிறுமி லகரிக்கு வெற்றிகரமாக பொருத்தினர். ரேணிகுண்டாவில் இருந்து தேவஸ்தானம் வரை சாலைகள் சிறப்பாக இருந்த காரணத்தால் மிக விரைவாக இதயம் எடுத்து செல்லப்பட்டிருக்கிறது. குறைந்த நேரத்தில் வந்த காரணத்தால் குழந்தை உயிரும் காப்பாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் இதுவரை 10 பேருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications