2 இளைஞர்களை சுட்டுக் கொலை செய்த திரிணாமுல் பிரமுகர் பபித்ரா ராய் கைது- கட்சியில் இருந்து சஸ்பென்ட்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மால்டாவில் 2 இளைஞர்களை சுட்டுப் படுகொலை செய்த திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் பபித்ரா ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சஸ்பென்ட் செய்துள்ளது.
மால்டாவின் இங்கிலீஷ்பஜார் பஞ்சாயத்து சமிதியின் தலைவராக இருப்பவர் பபித்ரா ராய். இவர் குலிபாரா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு சைக்கிள் மீது மோதிவிட்டு வேகமாக சென்றது.
அந்த காரை துரத்திக் கொண்டு அப்பகுதி மக்கள் சென்றனர். இதில் ஆத்திரமடைந்த பபித்ரா ராய், காரில் இருந்தபடியே கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ஆசிம் மண்டல், ராஜூ பஸ்வான் ஆகிய 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இதனால் கொந்தளித்த அப்பகுதி மக்கள் பபித்ரா ராய் காரை தாக்கி சேதப்படுத்தி அவரை கீழே இழுத்துப் போட்டு தாக்க முயன்றனர். ஆனால் போலீசார் அவரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் பபித்ரா ராயை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பபித்ரா ராயை கட்சியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சஸ்பென்ட் செய்துள்ளது.