கொல்கத்தா மாநகராட்சி தேர்தல்: மமதா 'சுனாமி'; பா.ஜ.க. தேறாது: கருத்து கணிப்பு
கொல்கத்தா: கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே அபார வெற்றி பெறும் என்றும் பாரதிய ஜனதா கட்சியால் 6 வார்டுகளில் மட்டுமே வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றி எப்படியும் மேற்கு வங்கத்தில் காலூன்றி விடுவது என கங்கணம் கட்டிக் கொண்டு வியூகம் வகுக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
அதுவும் பல்லாயிரம் கோடி ரூபாய் சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தை முன்வைத்து பிரசாரம் செய்தால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முடியும் என்பது பா.ஜ.க.வின் கனவு.
அதேபோல் சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கானது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்வரும் சட்டசபை தேர்தலில் கடும் சரிவை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன. கொல்கத்தா மாநகராட்சிக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

மீண்டும் திரிணாமுல் வசம்
இது தொடர்பான கருத்து கணிப்பில், கொல்கத்தா மாநகராட்சியை திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் என்றே தெரிவித்துள்ளன. ஆனால் பாரதிய ஜனதா எதிர்பார்க்கும் அளவுக்கெல்லாம் காலூன்றி விடமுடியாது எனவும் 6 வார்டுகளில்தான் வெல்ல முடியும் என்கின்றன கருத்து கணிப்புகள்.
|
கருத்து கணிப்பு முடிவுகள்
கொல்கத்தா மாநகராட்சி மொத்தம் 141 வார்டுகளைக் கொண்டது. கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் தொடர்பாக ஆனந்தபஜார் பத்திரிகா நாளேடு - ஏ.பி.பி- நீல்சன் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு விவரம்:
திரிணாமுல் காங்கிரஸ் -103 ; இடதுசாரிகள்- 31; பாரதிய ஜனதா- 6; காங்கிரஸ் 4. வார்டுகளைக் கைப்பற்றுமாம்..
|
திரிணாமுல் அபாரம்
கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 95 வார்டுகளைத்தான் கைப்பற்றி இருந்தது. இடதுசாரிகள் 2010-ல் 32 வார்டுகளைக் கைப்பற்றி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு சரிவு
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது நாடு முழுவதும் வீசியதாக கூறப்பட்ட மோடி அலையால் பாரதிய ஜனதா கட்சி கொல்கத்தாவில் 23.6% வாக்குகளைப் பெற்றிருந்தது. இதனடிப்படையில் கொல்கத்தா மாநகராட்சியில் பா.ஜ.க. 26 வார்டுகளைக் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கடந்த ஆண்டு கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன.
ஆனால் இம்முறை 6 வார்டுகள்தான் கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு. அதாவது பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் தற்போது 12% ஆக குறைந்துள்ளதாம்.. பாரதிய ஜனதாவின் எஞ்சிய 14% வாக்குகள் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் பக்கம் தாவியிருக்கிறதாம்..
பா.ஜ.க.வின் கனவு தொடரத்தான் வேண்டும்?












Click it and Unblock the Notifications