அதிமுகவுக்கு கூவத்தூர்.. குஜராத் காங் எம்எல்ஏக்களுக்கு பிடதி.. இவ்வளவுதாங்க அரசியல்!
தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டதைப் போல குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர் பெங்களூரு பிடதியில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு: தமிழகத்தில் சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டு கவனிக்கப்பட்டதைப் போல குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தற்போது பெங்களூருவில் பிடதியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலரும் ஆளும் பாஜகவிற்கு தாவி வருவதுதான்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு மேலும் தாவுவதை தடுக்கும் வகையில் 44 எம்எல்ஏக்களை கடத்தி வரப்பட்டு பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் அரசியல்
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் தேர்தல் தொடர்பான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ
குடியரசுத்தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த புகாரின் பேரில் குஜராத் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்த காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வகேலாவின் ஆதரவாளர்களான காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கட்சி கொறடா பல்வந்த்சிங் ராஜ்புத், தேஜஸ்ஸ்ரீபன் படேல், பிரகலாத் படேல் ஆகியோர் ராஜினாமா செய்தனர். அவர்கள் பாஜக தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜவில் இணைந்தனர்.
|
கட்சி மாறும் காங். எம்எல்ஏக்கள்
இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அதிர்ச்சி விலகுவதற்குள்ளாக நேற்று மன்சிங் சவுகான் மற்றும் சனாபாய் சவுத்ரி ஆகிய இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 காங்கிரஸ் .எம்எல்ஏ.க்கள் பதவி விலகியுள்ளதால் இந்த கட்சியின் பலம் 51 ஆக குறைந்துள்ளது.

ராஜ்யசபா தேர்தல்
குஜராத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா உறுப்பினர்களின் எம்பி பதவிக்கு ஆகஸ்ட் 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் அகமது படேல் போட்டியிடுகிறார். 26ம் தேதி அவர் தாக்கல் செய்துள்ளார்.

பெங்களூருவிற்கு கடத்தல்
காங்கிரஸ் பலம் குறைந்து வருவதையடுத்து ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற 44 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்பதால் அக்கட்சியின் 44 எம்.எல்.ஏ.க்கள் மாற்று கட்சிக்கு ஓடாமல் இருக்க பெங்களூருவிற்கு கடத்திச் செல்லப்பட்டனர்.
|
பிடதி ரிசார்ட்
கடத்திச் செல்லப்பட்ட 44 எம்.எல்.ஏ.க்கள் நள்ளிரவில் அகமதாபாத் விமான நிலையம் வந்தனர். பின்பு அவர்கள் அனைவரும் அங்கிருந்து பெங்களூரு சென்றனர். அதிகாலை பெங்களூருவிற்கு அழைத்து வரப்பட்ட எம்எல்ஏக்கள், 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 8ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் வரை பிடதி ரிசார்டில் எம்எல்ஏக்கள் ராஜஉபசாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூவத்தூரை மிஞ்சுமா பிடதி
கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்ட போது சசிகலா அணியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேர் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ உபசாரம் நடைபெற்றது. அதேபோல பிடதியில் தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கவனிப்பு இருக்குமா? அல்லது கூவத்தூரை மிஞ்சுமா பிடதி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications