டெல்லி எய்ம்ஸில் தமிழக மாணவர் சரவணன் இடஒதுக்கீடு சீட்டுக்காக விஷ ஊசி போட்டு கொலை?
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்ந்த தமிழக மாணவர் சரவணன் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டது இடஒதுக்கீடு சீட்டுக்காகதான் என அதிர வைக்கின்றன டெல்லி தகவல்கள்.
திருப்பூர் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த கணேசன் மகன் சரவணன், மதுரை மருத்து கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மேற்படிப்புக்காக அவர் சேர்ந்திருந்தார். டெல்லி கெளதம் நகரில் தங்கியிருந்த சரவணன் ஜூலை 10-ந் தேதியன்று மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஊசி போட்டு கொலை
அவரது வலது கையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டதற்கான அடையாளங்களை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர்., தற்போது சரவணன் தற்கொலை செய்து கொள்ளவில்லை... விஷ ஊசி போட்டு மருத்துவம் தெரிந்த யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்கிறது பிரேத பரிசோதனை அறிக்கை.
கடும் போட்டி
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பது பொதுவாக மருத்துவம் படிப்போரின் உயர்ந்தபட்ச கனவு. அங்கு சேருவதற்கு கடும் போட்டி நிலவுகிறது.
கலந்தாய்வு
சரவணன் கொலை செய்யப்பட்ட காலத்தில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கைக்கு 3 கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. அப்போது 1,2வது கலந்தாய்வுகள் முடிந்து விட்டன.
3-வது கட்ட கலந்தாய்வு ஜூலை 24-ந் தேதி நடைபெற இருந்தது. ஜூலை 19-ந் தேதி வரை காலியாக இருந்த இடங்களுக்கு 3-வது கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
சரவணன் இடம் காலி
தமிழக மாணவர் சரவணன் ஜூலை 10-ந் தேதி கொல்லப்பட்டுவிட்டார். இதனால் அவரது மருத்துவ இடம் காலியானது. சரவணன் இடம் காலியானதன் அடிப்படையில் 3-வது கட்ட கலந்தாய்வில் ஒரு மாணவருக்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இடஒதுக்கீடு கோட்டா
குறிப்பாக நேரடி திறந்த நிலைப் போட்டியில் இடம் கிடைக்காதவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குரிய ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும். ஆகையால் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் பெறவேண்டும் என்பதற்காக போட்டியில் இருந்த ஒருநபர்தான் சரவணனுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்திருக்க வேண்டும். ஆகையால் அந்த கொலையாளி யார்? அவர் கொலை செய்தது இடஒதுக்கீட்டு சீட்டுக்காகத்தானா? என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
கண்டுபிடிக்க வேண்டும்
இடஒதுக்கீடு கோட்டாவில் எப்படியும் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காக சரவணனை கொலை செய்து ஒரு காலி இடத்தை வேண்டும் என்றே உருவாக்கிய அந்த கொடூர கொலையாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்பது டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் தமிழக மருத்துவர்களின் ஒற்றை குரல்.