தமிழக அரசும் பவானி குடும்பத்திற்கு உதவித் தொகை அளிக்க வேண்டும்: தமிழிசை
பெங்களூரு: குண்டு வெடிப்பில் பலியான பவானிக்கு தமிழக அரசும் உதவித் தொகை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூரு சர்ச் தெரு பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் சென்னைப் பெண் பவானி தேவி மண்டை ஓடு உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப் பட்டிருந்த பவானியின் உடலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் தென்சென்னை மாவட்டத்தலைவர் காளிதாஸ், மத்தியசென்னை மாவட்ட பொதுச் செயலாளார் தனசேகரன், மாவட்ட துணைத்தலைவர் சிவநேசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "தீவிரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். தாயை இழந்து வாடும் பெண்குழந்தைக்கு ஆதரவாக கர்நாடக அரசு நிதி அறிவித்ததைப் போல, தமிழக அரசும் உதவித்தொகையை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
முன்னதாக குண்டு வெடிப்பில் பலியான பவானியின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ. 5 லட்சம் உதவித் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.