29வது நாளாக தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்... கள்ள மவுனியாக பாஜக
29வது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வழக்கம் போல செவிடன் காதில் ஊதிய சங்கு போல மத்திய அரசு கள்ள மவுனம் சாதித்து வருகிறது.
டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்று 29வது நாளாக ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 29வது நாளாக இந்தப் போராட்டம் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நூதனப் போராட்டம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். பாம்பு கறி, எலி கறி தின்று தங்களது கொடுமையான சூழலை அரசிற்கு எடுத்துரைக்க முயன்றனர்.
விவசாய சங்கங்கள் ஆதரவு
விவசாயிகளின் போராட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி வடமாநில அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும் விவசாய சங்கத்தினரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவின் கள்ள மவுனம்
தமிழக விவசாயிகள் இவ்வளவு போராட்டம் நடத்தியும், மத்தியில் ஆளும் பாஜக அரசு அவர்களை கண்டு கொள்ளவில்லை. மேலும், அவர்களை இழிவு படுத்தி வருகிறது. அது பற்றி பேசிவிடக் கூடாது என கள்ள மவுனம் காத்து வருகிறது.
மனுவை மட்டும் பெற்று..
இந்நிலையில் பிரதமரை சந்திக்க வைப்பதாக 8 விவசாயிகளை அழைத்துச் சென்ற டெல்லி போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் மனுவை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பியுள்ளனர்.
நிர்வாணப் போராட்டம்
இதனைத் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் சாலையில் ஆடைகளை அகற்றி நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி சிவா
இதனைத் தொடர்ந்து திமுக ராஜ்ய சபா எம்பி விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினார்.
உறுதி
ஆனாலும், கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தங்களது பிணங்கள்தான் டெல்லியில் இருந்து செல்லும் என்று அய்யாகண்ணு உறுதியாக கூறியுள்ளார்.
29வது நாள்
இதனைத் தொடர்ந்து இன்று 29வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் போராட்டத்தின் வீரியத்தை எடுத்துச் செல்லும் வகையில் போராட்ட யுத்திகளை வகுத்து தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.