இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு
தமிழ்நாட்டில் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என்றும் இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுவது மாநில அரசின் கொள்கை முடிவு என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என அறக்கட்டளை ஒன்றின் சார்பில் அர்ஜுன் இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தன்னுடைய மனுவில், "தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடப்பதும் மாநில அரசும் அதனை எதிர்ப்பதும் தவறு. மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுக்கொண்டால் மாணவர்களுக்கு சாதகமான விஷயமாக இருக்கும். தேசிய கல்விக் கொள்கையை அரசியலாக்கக்கூடாது; அதனை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத், நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
- இந்தி திணிப்பு: உள்துறை அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சீறிய அண்ணா
- யார் இந்த அண்ணா? தமிழ்நாட்டு அரசியலில் அவர் ஏன் இவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறார்?
நீதிபதிகள் கேள்வி
அப்போது நீதிபதிகள், "எத்தனை மொழியைக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்பது மாநில அரசின் முடிவுதான் என்றாலும், கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது நல்ல விஷயம்தானே," என்று கூறினர்.
"தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் அப்படித்தானே இருக்கிறது," எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
"தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றால் இந்தி தெரியாவிட்டால் சிரமமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மும்மொழிக் கொள்கையை அரசு ஏன் அனுமதிக்கக்கூடாது" எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசு விளக்கம்
இந்த வழக்கில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர், "இந்தியைக் கற்றுக்கொள்ள யாருக்கும் தடை விதிக்கவில்லை. அதே நேரத்தில் இரு மொழிக் கொள்கையை அமல்படுத்துவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு" என்று தெரிவித்தார்.
இது தொடர்பான விளக்கத்தை விரிவான பதில் மனுவாகத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.
பிற செய்திகள்:
- இந்திய ஆட்சி பணி விதிகளை திருத்துவது கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும்: மு.க.ஸ்டாலின் கடிதம்
- டோங்கா எரிமலைச் சாம்பல் பூமியைக் குளிர்விக்குமா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
- உக்ரைன் - ரஷ்யா இடையில் போர் பதற்றம் நிலவுவது ஏன்? எளிய விளக்கம்
- மகாராஷ்டிராவில் தாக்கப்பட்ட கர்ப்பிணி காவலர் - என்ன நடந்தது?
- அயோத்தி அருகே 251 மீட்டர் ராமர் சிலை அமைக்க நிலங்களை பலவந்தமாக பறிப்பதாக விவசாயிகள் புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்