காவிரியில் கழிவுநீர் கலப்பதைத் தடை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு!
டெல்லி: காவிரியில் கழிவு நீர் கலப்பதைத் தடை செய்ய வலியுறுத்தி கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று வழக்குத் தொடர்ந்துள்ளது.
கர்நாடக சட்டமேலவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவராஜ், கர்நாடகத் தலைநகர் பெங்களூர் மற்றும் அதையொட்டிய பகுதிளிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

இது தமிழகத்தில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. கர்நாடகாவின் இந்த அடாவடித்தனத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் காவிரியில் கழிவுநீர் கலப்பதை கர்நாடகா அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், கர்நாடக மாநில பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில் ஏராளமான அளவுக்கு சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் அப்படியே கலக்கப்படுகிறது. இதனால் தமிழக பகுதிக்கு வரும் காவிரி ஆற்று நீர் மாசடைந்து உள்ளது. தமிழக மக்கள் மாசடைந்த காவிரி ஆற்று நீரை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications