காவிரிக்காக நாடாளுமன்றத்தில் கை கோர்த்த திமுக-அதிமுக எம்.பி.க்கள்! காந்தி சிலை முன்பு தர்ணா
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை நிறைவேற்றுவதாக தெரியவில்லை. இந்த தீர்ப்புக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
என்ன செய்ய போகிறார்கள்
எனினும் அனைத்துக் கட்சி தலைவர்களை பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் துறை அமைச்சரை சந்திக்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து வழங்க கோரி ஆந்திர எம்பிக்கள் நேற்று போராட்டம் நடத்திய நிலையில் காவிரிக்காக தமிழக எம்பிக்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.
காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் இன்று தமிழக எம்பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இணைந்து போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். எதிரும் புதிருமாக உள்ள அதிமுகவும், திமுகவும், காவிரி விவகாரத்தில் அண்மைகாலமாக இணைந்து வருகின்றனர்.
மத்திய அரசு என்ன செய்ய போகிறது
இவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் வாழ்த்துகளை தெரிவித்தார். இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.