"எலக்ட்ரானிக்ஸ் சிட்டி தும்ப பக்கா குரு... அதுக்கே... ஓசூருக்கு ஷிப்ட் மாடிதிவே"
பெங்களூரு: பெங்களூர் அருகே உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி வளாகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர்கள் தற்போது ஓசூர் சுற்று வட்டாரத்தைக் குறி வைத்து ஜாகையை மாற்றி வருகின்றனராம்.
பெங்களூர் நகர போக்குவரத்து நெரிசல், தினசரி பயணத்தால் ஏற்படும் அலுப்பு ஆகியவையே இதற்கு முக்கியக் காரணம். அதேசமயம், ஓசூரிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மிக அருகே உள்ளதால் ஓசூருக்கு தங்களது ஜாகையை பலரும் மாற்ற ஆரம்பித்துள்ளனராம்.
அதை விட முக்கியமாக பெங்களூரை விட ஓசூரில் வாடகை உள்ளிட்டவை குறைவு என்பதாலும் பலர் ஓசூரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனராம்.

ஒரே ஒரு மணி நேரம் போதும்
ஓசூரிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டியின் பயண தூரம் வெறும் அரை மணி நேரம்தான். எனவே காலை அரை மணி நேரம், மாலை அரை மணி நேரம் என ஒரு மணி நேரத்தில் பயண நேரம் சுருங்குகிறது.

22 கிலோமீட்டர் தூரம்
ஓசூரிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டி 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நிறைய பஸ்கள் உள்ளன. மேலும் பெங்களூர் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியைத் தொட்டுத்தான் செல்லும் என்பதால் பஸ்ஸுக்குப் பஞ்சாயத்தே கிடையாது.

பாவப்பட்ட ஒயிட்பீல்ட் - சர்ஜாப்பூர்
அதேசமயம், ஒயிட்பீல்ட், சர்ஜாப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஐடி அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு இதுபோன்ற விமோச்சனம் இல்லை. அவர்கள் ஒயிட்பீல்டிலிருந்து கோரமங்களா வருவதற்கு 2 மணி நேரமாகுமாம். மாலையில் அதேபோல மறுபடியும் 2 மணி நேரம் கடு கடு பயணம் என்று சலித்துக் கொள்கிறார் ஷில்பா என்ற ஐடி ஊழியர்.

பங்காளி உங்களுக்கு எம்புட்டு நேரமாச்சு
காலையில் அலுவலத்திற்கு வந்ததுமே முதல் வேலை.. பங்காளி எனக்கு 2 மணி நேரமாச்சு.. உங்களுக்கு எம்புட்டு நேரமாச்சு என்று சக ஊழியர்களிடம் கேட்டு விட்டுத்தான் லேப்டாப் பேகையே பலரும் கீழே வைக்கின்றனராம். அப்படி ஆகி விட்டது பெங்களூரு டிராபிக் நிலைமை.

என்னய்யா இது
ஒரு நாளைக்கு போக்குவரத்திலேயே 4 முதல் 5 மணி நேரம் வலை செலவிட்டால், உடல் என்ன ஆகும், எப்படி வேலையில் கவனம் செலுத்த முடியும் என்பதே பெரும்பாலான ஊழியர்களின் குமுறலாக உள்ளது.

நத்தை கேவலமா பாக்கும் பாஸ்!
பெரும்பாலான சாலைகளில் காலையிலும், மாலையிலும் வாகனங்கள் ஊர்வதைப் பார்த்தால் நத்தை கூட கேலியாக பார்த்து விட்டு சற்று வேகமாகப் போகும் என்று ஒரு ஊழியர் புலம்புகிறார்.

10 லட்சம் பேர்
நாட்டின் ஐடி தலைநகராக விளங்கும் பெங்களூரைப் பொறுத்தவரை சர்ஜாப்பூர், ஒயிட்பீல்டு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி ஆகியவைதான் மிகப் பெரிய ஐடி ஹப் ஆகும். இங்கு மட்டும் மொத்தமாக 10 லட்சம் பேர் வரை பணியாற்றுகிறார்களாம். இங்குதான் இன்போசிஸ், விப்ரோ, சிஸ்கோ உள்ளிட்ட பலமுக்கிய நிறுவனங்களும் உள்ளன.

ஆராம்சே!
இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால்தான் தமிழகத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் பலரும் ஓசூருக்கு இடம் பெயர்வதில் ஆர்வம் காட்டுகின்றனராம். இதனால் தேவையில்லாத அலைச்சல் குறைவதோடு, தமிழகத்து சாப்பாடு சாப்பிடும் வாய்ப்பும் போனஸாக கிடைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications