தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை வேண்டும்.. கோர்ட்டுக்குப் போன 3 குழந்தைகள்!
டெல்லி: சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் அடிப்படையில் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கக் கோரி 3 குழந்தைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அக்குழந்தைகளின் பெற்றோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தசரா மற்றும் தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் புகையால் காற்று மாசு அடைவதாகவும், இதனால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மூவரின் பெயரால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாசடைந்துள்ள தலைநகர் டெல்லியின் நிலைமை இது போன்ற பட்டாசுகளால் இன்னும் மோசமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பட்டாசுகளினால் எழும் புகையால் கல்லீரல் நோய்கள், ஆஸ்துமா, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்." என்று மனு தாக்கல் செய்த அர்ஜூன் கோயல், ஜோயா ராயோ பாசின், அர்னவ் பந்தாரி ஆகிய மூவரும் தெரிவித்துள்ளனர். இவர்களது சார்பில் வழக்கறிஞரான கோபால் சங்கர் என்பவம் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
தங்களது குழந்தைகள் டெல்லியில் சுத்தமான காற்றை சுவாசிக்க வழி செய்ய வேண்டுவதால் இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.