குப்பையில் புதையும் டெல்லி, நீரில் மூழ்கும் மும்பை.. உச்சநீதிமன்றம் கடும் சாடல்
டெல்லி குப்பைமேடுகளில் புதைகிறது.. மும்பை நீரில் மூழ்குகிறது? அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.
Recommended Video

டெல்லி: டெல்லி நகரம் மலை போன்ற குப்பை மேடுகளில் புதைந்துகொண்டிருக்கிறது என்றும் மும்பை நீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறது என்றும் இதற்கு அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.
டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகூர், தீபக் குப்தா அமர்வு ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. அதில், தலைநகர் டெல்லியில் காஜீபூர், பால்ஸ்வா, ஓக்லா ஆகிய இடங்களில் மலைபோல உள்ள குப்பை மேடுகளை அகற்றும் அதிகாரம் கொண்டவர் யார் என்று கேட்டுள்ளது.

அப்போது, நீதிபதிகள் கூறுகையில், "டெல்லி மலைபோன்ற குப்பை மேடுகளில் புதைந்துகொண்டிருக்கிறது. மும்பை நீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் முழுவதுமாக நடக்கவில்லை. அரசாங்கமும் எதுவும் செய்வதில்லை. நீதிமன்றம் தலையிடும்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நாங்கள் தாக்கப்படுகிறோம். நாங்கள் அதிகாரப் பிரிவினை மற்றும் அதிகாரவரம்பு அத்துமீறல் குறித்து விரிவுரைகளைக் கொடுத்திருக்கிறோம்" என்று தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
அதோடு, திடக் கழிவு மேலாண்மையில் மாநிலங்களின் கொள்கையை பிரமானப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, பதில் அளிக்காத 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
முதல் உத்தரவில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத பீகார், சட்டீஸ்கர், கோவா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மேற்குவங்கம், கேரளா, கர்நாடகா, மேகாலயா, பஞ்சாப், லட்சதீவுகள் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபரதாம் விதித்துள்ளது.
இந்த விஷயத்தில் மாநில வழக்கறிஞர்கள் இரண்டாவது முறை ஆஜராகாவிட்டால் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த வழக்கில், ஹரியானா, ஜார்க்கண்ட், ஒடிஷா, நாகலாந்து, தாத்ரா, நாகர் ஹவேலி, அந்தமான், நிகோபார் தீவுகள் திடக் கழிவு மேலாண்மை கொள்கை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல, சிக்கிம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், தெலங்கானா, டையு, டாமன் ஆகியவற்றின் பிரதிநிதிகள் திடக்கழிவு மேலாண்மை கொள்கை பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர்.
திடக்கழிவு மேலாண்மையில் பல மாநிலங்களில் இன்னும் சீரான கொள்கை முடிவுகள் எடுக்காத நிலையே உள்ளது.
ஏற்கெனவே காற்று மாசுபாட்டில் சிக்கியுள்ள டெல்லி குப்பை மேடுகளாலும் புதைந்துவருகிறது என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அதோடு, கடந்த சில தினங்களில் மும்பையில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் மும்பை மூழ்கிக்கொண்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மாநகரங்களின் திடக் கழிவு மேலாண்மை கொள்கை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications