எல்லையில் பதற்றம்.. ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு
ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 3 வாரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் 2வது முறையாக எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீர் எல்லையில் மச்சில் செக்டாரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதில் ஒருவரது உடல் சிதைக்கப்பட்டு இருந்ததாக செய்திகள் வெளியானது. இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவம் மறுத்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்திய வீரர்கள் நேற்று காலையில் இருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். மச்லி, ரஜ்சோரி பூனாச்சா ஆகிய ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் மீதான அதிரடித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாடு தெரிவித்தது.
இதனால் இருநாடுகளிடையே எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்திய-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தொலைபேசியில் பேசியுள்ளனர். இதையடுத்து ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
முன்னதாக மன்தீப்சிங் என்ற வீரரை பாகிஸ்தான் வீரர்கள் தலையை துண்டித்து கொன்றனர். எனவே, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்திய வீரர்கள் அதிரடித் தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications