எளிய குடும்பத்தில் பிறந்து பிரதமர் வேட்பாளராக உயர்ந்த நரேந்திர மோடி
டெல்லி: எளிய சாமானிய குடும்பத்தில் பிறந்து பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக உயர்ந்துள்ளவர் நரேந்திர மோடி.
டெல்லியில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
உள்கட்சி பூசல், கடும் நெருக்கடிக்கு இடையே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

1950, செப்.17
1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி குஜராத்தின் வாத்நகரில் மோடி பிறந்தார். இளம் பருவத்தில் அகமதாபாத்தில் அவரது உறவினர் நடத்திய தேனீர் கடையில் பணிக்கு சேர்ந்தார் மோடி.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில்...
1960களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்த மோடி, மணி நகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திலேயே தமது வாழ்க்கையை தொடங்கினார்.

1987-ல் பாஜக
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து 1987 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்குள் அடி எடுத்து வைத்தார் மோடி.

வகித்த பதவிகள்
1990-ல் குஜராத் மாநில பாஜக ஒருங்கிணைப்புச் செயலர், பாஜக நிர்வாகி, பொதுச் செயலர் ஆகிய பதவிகளை வகித்து வந்த மோடி தற்போது பிரதமர் வேட்பாளராகி இருக்கிறார்.

குஜராத் முதல்வராக
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானியின் ஆதரவுடன் மோடி குஜராத் முதல்வர் வேட்பாளராக 2001 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அன்று முதல் தற்போது வரை குஜராத் முதல்வராக திறம்பட பணியாற்றி வருகிறார் மோடி.

லோக்சபா பிரசார குழு தலைவர்
கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் நரேந்திர மோடி பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசாரக் குழு தலைவராக அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்வானி கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலையிட்டு சமாதானப்படுத்திய பின்பு அத்வானி தமது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.

பிரதமர் வேட்பாளர்
2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 17 ந் தேதி தமது 63 வது பிறந்த நாளை நரேந்திர மோடி கொண்டாட உள்ள நிலையில் அவருக்கு கிடைத்த பரிசாக ஆதரவாளர்கள் கருதுகின்றனர்..












Click it and Unblock the Notifications