குடிநீர் வசதி கேட்டு பெங்களூருக்குள் நூற்றுக்கணக்கான டிராக்டர்களோடு நுழைந்த விவசாயிகள் - தடியடி
பெங்களூர்: குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி டிராக்டர்களுடன் விவசாயிகள் பெங்களூருக்கு முற்றுகையிட கிளம்பியதால் நகரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகளை போலீசார் தடியடித்து நடத்தி விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரின் அண்டை மாவட்டங்களான, கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் கோடைக்காலங்களில் அதிகளவு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பரமசிவய்யா தலைமையில் அரசு குழு அமைத்தது.

இந்த குழுவினர் ஆய்வு செய்து கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதோடு, நிரந்தர நீர்ப்பாசன திட்டத்திற்கு ஏற்ற வகையிலான திட்டங்களை மாநில அரசுக்கு சிபாரிசு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையை அமல்படுத்த மாநில அரசு முன்வரவில்லை எனத்தெரிகிறது. இருப்பினும், கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர், துமகூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்கள் பயனடையும் வகையில் எத்தினஹொலே குடிநீர் திட்டத்தை வகுத்து அதை நிறைவேற்றுவதற்கான பணியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
எத்தினஹொலே குடிநீர் திட்டம் வேண்டாம், அதற்கு பதில் பரமசிவய்யாவின் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள நீர்ப்பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள், விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை முன்வைத்து அவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 160 நாட்களாக அவர்கள் தங்களது மாவட்டங்களில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால், அவர்களின் போராட்டத்தை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை.
இதன் காரணமாக டிராக்டர்களில் ஊர்வலமாக பெங்களூருவுக்கு வந்து விதான சவுதாவை (சட்டசபை கட்டிடம்) முற்றுகையிட்டு பரமசிவய்யா அறிக்கையை அமல்படுத்த கோரி நேற்று போராட்டம் நடத்தப்படும் என கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்ட விவசாய அமைப்பினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் குறித்த அறிவிப்பு வந்தவுடன் பெங்களூரு நகர போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். அதன்படி, நேற்று பெங்களூரு நகருக்குள் விவசாயிகள் வரும் டிராக்டர்களை நுழைய தடை செய்து போலீசார் உத்தரவிட்டனர்.
இருப்பினும் 100க்கும் அதிகமான டிராக்டர்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்களில் 1,000க்கும் அதிகமானோர் பெங்களூருவை நோக்கி வந்தனர். இதில் பெண்களும் கலந்துகொண்டனர். இவர்களை பெங்களூரு நகருக்குள் நுழைய விடாமல் தடுக்கும் வகையில் கோலார், சிக்பள்ளாப்பூர் பகுதிகளில் இருந்து பெங்களூருவுக்கு நுழைவதற்கான சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
போராட்டக்காரர்கள் தேவனஹள்ளி விமான நிலைய சாலையில் வந்தபோது டிராக்டர்களுடன் உள்ளே நுழைய முயன்றனர். ஆனால், அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால், போலீசாருக்கும், விவசாயிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த விவசாயிகள், சாலையில் போலீசார் ஏற்படுத்தி இருந்த தடுப்பு வேலிகளை தள்ளிக்கொண்டு பெங்களூரு நகருக்குள் டிராக்டர்கள் உள்பட அவர்கள் வந்த வாகனங்களுடன் நுழைந்தனர்.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து தொடர்ந்து சென்று விதான சவுதாவை முற்றுகையிட முயன்றனர். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை மேற்கொண்டு டிராக்டர்கள் உள்பட எந்த வாகனங்களிலும் செல்ல விடாமல் தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினார்கள்.
இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆத்திரமடைந்த சில விவசாயிகள் மேக்ரி சர்க்கிள் அருகே நின்ற போலீஸ் வாகனத்தை கவிழ்க்க முயன்றனர். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். சில விவசாயிகள் அந்த வழியாக சென்ற பி.எம்.டி.சி. பஸ்களை வழிமறித்து சேதப்படுத்தியதோடு,
இதையடுத்து அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே மீண்டும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தள்ளு-முள்ளு எல்லை மீறவே போலீசார் தடியடி நடத்தினார்கள்.
இதனால், விவசாயிகள் தாங்கள் வந்த டிராக்டர்கள், கார்கள், சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை சாலையிலேயே விட்டுவிட்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த தடியடியில் விவசாயிகள் சிலர் காயம் அடைந்தனர்.
இந்த போராட்டம் காரணமாக நேற்று காலையில் இருந்து பெங்களூர்-பெல்லாரி ரோட்டில் முற்றிலுமாக போக்குவரத்து தடைப்பட்டது. விவசாயிகள் நகருக்குள் டிராக்டர்களுடன் நுழைந்ததால் மேக்ரி சர்க்கிள் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெங்களூரு நகரில் முக்கியமான மேக்ரி சர்க்கிளில் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் நகரின் அனைத்து பகுதிகளிலும் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் பெல்லாரி ரோட்டில் மேக்ரி சர்க்கிள் வழியாக யஷ்வந்தபுரம், விமான நிலையத்திற்கு நேற்று வாகனங்களில் சென்றவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள். மேக்ரி சர்க்கிளில் இணையும் சாலைகளில் வாகனங்கள் 5 கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்து நின்று ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன. இந்த போராட்டம் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் நேற்று வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.












Click it and Unblock the Notifications