நாளை முதல் 4 மணி நேரம் முன் ரத்து செய்தால் மட்டுமே ரயில் டிக்கெட் கட்டணம் கிடைக்கும்!
டெல்லி: நாளை முதல் ரயிலில் பயணம் செய்வதற்கு 4 மணி நேரம் முன்னதாக ரத்து செய்தால் மட்டுமே கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்ற புதிய முறை அமலாகின்றது.
ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டிக்கெட் முன்பதிவில் இடைத்தரகர்கள் மற்றும் ஏஜென்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில் முன்பதிவு ரயில் டிக்கெட் ரத்து மற்றும் கட்டணம் திருப்பி அளிப்பதில் வழிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனை நாளை முதல் ரயில்வே துறை அமல்படுத்துகிறது.

ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும் போது 2 ஆம் வகுப்பு இருக்கை வசதி உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டிற்கு ரூபாய் 30 முன்பு பிடித்தம் செய்யப்பட்டது. இனி அது ரூபாய் 60 ஆக உயர்த்தப்பட்டு பிடித்தம் செய்யப்படும். 3 அடுக்கு ஏ.சி பெட்டிகளுக்கான பயணச்சீட்டுக்கு தற்போது ரூபாய் 90 பிடித்தம் செய்யப்படுகிறது. நாளை முதல் இது ரூபாய் 180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு ரூபாய் 60ல் இருந்து ரூபாய் 120 ஆகவும், 2 ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு ரூபாய் 100 இல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே கட்டணம் திருப்பி அளிக்கப்படும். ரயில் புறப்பட்ட பின் டிக்கெட் ரத்து செய்தால் பணம் திரும்ப பெற முடியாது. காத்திருப்போர் பட்டியல், ஆர்.ஏ.சி டிக்கெட்டுகளை பொறுத்தவரை ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் பணம் திருப்பி அளிக்கப்படும். அதன் பின்னர் ரத்து செய்தால் கட்டணம் திருப்பி பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications