ஜப்பான், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நில அதிர்வு! மக்கள் அச்சம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகியிருந்தது.
ஜப்பானில் கடந்த 1 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியிருந்தது. இது இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா ஆகிய மாகாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 150 க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வும் ஏற்பட்டது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு நிலைமை சீரானதும் வாபஸ் பெறப்பட்டது. இதுவரை ஜப்பானில் நிலநடுக்கத்தில் 62 பேர் பலியாகிவிட்டனர்.
கடந்த சில நாட்களாக ரஷ்யா, மியான்மரில் நில அதிர்வுகள் இருந்து வருகின்றன. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் கூட நேற்று நள்ளிரவில் இரு முறை நில அதிர்வு ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நள்ளிரவு இரு முறை நில அதிர்வுகள் உணரப்பட்டன. முதல் நில அதிர்வு நள்ளிரவு 12.28 மணிக்கு 80 கி.மீ ஆழத்தில் பைசாபாத்திலிருந்து கிழக்கு பகுதியில் 126 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது.
இதையடுத்து சில மணி நேரத்தில் மீண்டும் ஒரு நில அதிர்வு உணரப்பட்டது. இது 12.55 மணிக்கு 100 கி.மீ. ஆழத்தில் பைசாபாத்தின் தென் கிழக்கே 100 கி.மீ. தூரத்தில் ஏற்பட்டது.
அரை மணி நேரத்தில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். முதல் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகவும் இரண்டாவது நில அதிர்வு 4.8 ஆகவும் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரிலும் நள்ளிரவு 12.38 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications