கணவரிடமிருந்து பிரிந்த மனைவியின் காதலுக்கு எதிர்ப்பு.. நிர்வாணமாக்கி, அடித்து உதைத்த கொடூரர்கள்!
காதல்ஜோடியை நிர்வாணமாக்கி ஊர்வலம் வரச்செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
உதய்பூர்: பழமைவாதங்களும், மூடநம்பிக்கைகளும், இந்தியாவை விட்டு என்றுதான் ஒழிந்து போகுமோ என்று பரிதவிக்கும் சம்பவங்கள் அவ்வப்வோது தலைதூக்கி நம்மை நிலைகுலைய வைத்துவிடுகிறது.
வட இந்தியாவில் குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் பல்வேறு கிராமங்களில் காப் பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு வந்தன. அங்கு அராஜகங்கள்தான் பெரும்பாலும் தீர்ப்புகளாக வழங்கப்பட்டும் வந்தன. இதில் சில இடங்களில் பெற்றோரே தங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யும் சமூக விரோதங்களும் தீர்ப்பின்பேரில் நிகழ்ந்தன.
சமீபத்தில், சக்தி வாஹினி அமைப்பின் நடவடிக்கையால், காப் பஞ்சாயத்துக்களுக்கு உச்சநீதிமன்றம் முடிவு கட்டியது. இதனால் மனிதாபிமானமற்ற முறையில் வழங்கும் பஞ்சாயத்துக்களுக்கெல்லாம் ஒரு ஆப்பு வைக்கப்பட்டதாகவே நாடு முழுவதும் நினைத்து நிம்மதி பெருமூச்சு விடப்பட்டது. அதில் பெருமளவு தற்போது வெற்றியும் கிடைத்துள்ளது. ஆனாலும், சில பழங்குடியின பஞ்சாயத்துக்கள் தொடர்ந்து அவலங்களை கொடுத்து வருகிறது.
பஞ்சாயத்தாரின் தீர்ப்பு
உதய்பூர் அருகே தனோகி பகால் என்ற ஒரு கிராமம். இங்கு பழங்குடியினர் பெருமளவு வசித்து வருகின்றனர். இதில், ஒரு இளம் பெண்ணுக்கு, 5 ஆண்டுகளுக்கு முன்பு தரூகாம்தி என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த பெண்ணுக்கோ தரூகாம்தியை மனப்பூர்வமாக பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ராம்லால் காம்தி என்ற இளைஞரையும் மனதில் நினைத்து காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த கணவர் தருகாம்தி, பஞ்சாயத்தை கூட்டிவிட்டார். என் மனைவிக்கு என்னுடன் வாழ பிடிக்கவில்லை என்று புகார் அளித்தார்.
ஆத்திரத்தில் கணவன்
இதனால் பஞ்சாயத்தார்கள், அவர்களது திருமணம் செல்லாது என அறிவித்து அது முறிந்துவிட்டதாகவும் அறிவித்தனர். இருவரையும் கணவன்-மனைவி உறவிலிருந்து பிரித்தும் விட்டனர். இதனையடுத்து அந்த பெண், தன் மனதில் நினைத்து காதலித்த இளைஞரை மறுதிருமணம் செய்ய ஆசைப்பட்டார். தன் விருப்பத்தை காதலனிடம் சொன்னார். அதற்கு அந்த இளைஞரும் ஒப்புக் கொண்டார். இதனால் இருவருமே அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். ஒருநாள் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை முன்னாள் கணவர் தரு காம்தி பார்த்துவிட்டார். ஆத்திரம் மண்டைக்கு ஏறியது.
நிர்வாண ஊர்வலம்
பஞ்சாயத்தார்கள் பிரித்து வைத்துவிட்டார்கள் என்று தெரிந்தும், தனக்கு அவள் தற்போது மனைவி இல்லை என அறிவித்தும், மீண்டும் பஞ்சாயத்தை கூட்டினார். அவர்கள் இருவரை பற்றியும் புகார் அளித்தார். இதனை கேட்ட பஞ்சாயத்தாருக்கோ, முன்னாள் கணவருக்கு வந்த கோபத்தை விட அதிக கோபம் பொங்கியது. பிரித்து வைத்துவிட்டு, உறவை அறுத்துவிட்டோம் என தெரிந்தும், பஞ்சாயத்தார்கள் கடும் தண்டனையை கொடுக்க முடிவுக்கு வந்தனர். அதன்படி, அந்தபெண்ணையும், காதலனையும் கட்டிவைத்து அடித்தனர். அத்துடன் வெறி அடங்காமல், இருவரது கைகளையும் கட்டினர். பின்னர் இருவரையும் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
புதிய சட்டங்கள் தேவை
இந்த கொடுமையை சிலர் செல்போனிலும் படம் பிடித்து கொண்டனர். நிர்வாண ஊர்வலம் கிராமத்தில் நடக்கிறது ஏன்ற தகவல் போலீசாருக்கு எட்டியது. இதையடுத்து விரைந்து வந்த போலீசார், பஞ்சாயத்தில் தண்டனை அளித்த 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும், தார்மிக விழுமியங்கள், சமூக ஒழுக்கம் என்று சில நெறிகளை தங்களுக்கு தாங்களே வகுத்து கொண்டு, சாதிய அடிப்படையில் தண்டனைகள் வழங்கி கொண்டிருக்கும் இதுபோன்ற பஞ்சாயத்து காட்டுமிராண்டிகளுக்கு இன்னும் பல சட்டங்களை போட வேண்டி நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.