திரிபுராவில் கட்சிகள் வாரியாக இந்த முறை எத்தனை சவீதம் வாக்குகள்.. முழு விவரம்
அகர்தலா: திரிபுராவில் 2018ம் ஆண்டை ஒப்பிடும் போது இந்த முறை எந்த கட்சி எத்தனை இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. எத்தனை சதவீதம் வாக்குகளை வாங்கி உள்ளன என்பதை இப்போது பார்ப்போம். பாஜகவிற்கு கடந்த முறையை விட இந்த முறை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும் 32 இடங்களில் வென்று ஆட்சியை பாஜக தக்க வைத்திருக்கிறது.
திரிபுரா சட்டப்பேரவையில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இங்கு 25 ஆண்டுகளாக சி.பி.எம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவந்தது. கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றது. வெறும் 5 சதவீதம் மட்டுமே வாக்கு வங்கி வைத்திருந்த பாஜகவில், காங்கிரஸ் கட்சியினர் மொத்தமாக பாஜகவில் இணைந்ததால் அதிரடியாக பாஜக மிகப்பெரிய பலம் வாய்ந்த கட்சியாக மாறியது இதனால் அப்போது மொத்தமிருக்கும் 60 தொகுதிகளுக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க 51 இடங்களிலும், ஐ.பி.எஃப்.டி 9 இடங்களிலும் போட்டியிட்டன.
இடது முன்னணிக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஃபார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தலா ஓர் இடத்திலும் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி 59 இடங்களில் தனித்துப்போட்டியிட்டது. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக பா.ஜ.க 36 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் 18 தொகுதிகள் பழங்குடியினரின் தொகுதிகள் ஆகும்.

எப்படி இருந்தது
2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. எனினும், வாக்கு வித்தியாசம் பாஜக கூட்டணிக்கும் இடது முன்னணி கூட்டணிக்கும் இடையேயான பெரிய அளவில் இல்லை. இந்த இரு கூட்டணிகளுக்குமிடையே 5 தொகுதிகளில் 1,000 வாக்குகளுக்கும் குறைவாகவும், 29 தொகுதிகளில் 5,000 வாக்குகளுக்கும் குறைவாகவே வாக்கு வித்தியாசம் இருந்தது.

களம் இறங்கின
தனது கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணியுடன் (ஐ.பி.எஃப்.டி) இணைந்து பாஜக கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. தற்போது திரிபுராவில் மாணிக் சகா பாஜக சார்பில் முதல்வராக உள்ளார். இந்நிலையில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க 55 தொகுதிகளிலும், ஐ.பி.எஃப்.டி 5 தொகுதிகளிலும் களம் இறங்கின. இடது முன்னணி-காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ராம் நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு இடது முன்னணி தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. இது தவிர மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்தலில் களம் இறங்கியது. திப்ரா மோத்தா பார்டி (டிஎம்பி) தனித்தும் களம் இறங்கியது.

கணிப்புகள்
திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 16-ந் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டது.

திப்ரா மோத்தா
அதன்படியே திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 32 இடங்களில் வென்றுள்ளது. திப்ரா மோத்தா கட்சி 13 இடங்களில் வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடத்திலும் வென்றுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை இடமான 31 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பாஜக தக்கவைத்துள்ளது.

வாக்கு சதவீதம்
திரிபுராவில் கட்சி வாரியாக வாக்கு சதவீதத்தை இப்போது பார்ப்போம். பாஜக 985797 வாக்குகள் பெற்று 39 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 622829 வாக்குகளுடன் 24.6 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் 216637 வாக்குகளுடன் 8.6 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. திப்ரா மோத்தா கட்சி உள்பட இதர கட்சிகள் 22.1 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளன. நோட்டாவிற்கு 33439 பேர் போட்டிருக்கிறார்கள். இது 1.4 சதவீதம் ஆகும். ஐபிஎப்டி கட்சி 31838 வாக்குகளுடன் 1.3 சதவீதம் வாக்குகளை வாங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications