விடுமுறை நாட்களில் விஐபிக்கள் வரவேண்டாம் - திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை
திருப்பதி: சுதந்திர தினம், வரலட்சுமி நோன்பு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் சிபாரிசு கடிதம் ஏற்கப்பட மாட்டாது எனவே விஐபிக்கள் வந்து சிரமப்பட வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது என்றார்.
குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக உள்ளது. அதோடு வி.ஐ.பி. பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் கோவிலில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
வரலட்சுமி பூஜை
இந்தநிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி வரலட்சுமி விரத பூஜை நடக்கிறது. அதற்கு அடுத்த 2 நாட்கள் பல அலுவலகங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக இருக்கின்றன.
சுதந்திரதினம்
ஆகஸ்ட் 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினமாகும். அடுத்து 2 நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாகும்.மேற்கண்ட நாட்களில் ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஐபிக்கள் வருகை
எனவே வி.ஐ.பி. பக்தர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் சாமி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. வி.ஐ.பி. பக்தர்கள் அதிகமானோர் வந்து டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுவதை தவிர்க்க வேண்டும். வி.ஐ.பி. பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
பக்தர்கள் கூட்டம்
ஆகஸ்டு மாதம் 8, 9, 10 மற்றும் 15, 16, 17-ந் தேதிகளில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிபாரிசுக்கடிதங்கள்
இந்த விடுமுறை நாட்களில் பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என்றும்.வி.ஐ.பி.க்கள் அதிக அளவில் சாமி தரிசனத்துக்கு வருவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.