இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம்.. 4 நாட்கள் விசாரணைக்கு பிறகு டிடிவி தினகரன் அதிரடி கைது
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தாக கூறப்படும் புகாரில் 4 நாட்கள் விசாரணைக்கு பின்னர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார்.
டெல்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு நாட்கள் விசாரணைக்குப் பின்னர் டெல்லி போலீசார் நள்ளிரவில் அவரை கைது செய்துள்ளனர்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரின. இதனால் இரட்டை இலை சின்னம், கட்சி பெயரை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை மீட்க சசிகலா தரப்பு தீவிர முயற்சி செய்தது.
இதனிடையே கடந்த 17ஆம் தேதி பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் முன் பணமாக ரூ.1.30 கோடியை டிடிவி தினகரன் கொடுத்ததாகவும் சுகேஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதனால், டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் பின்னர் டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பிய டெல்லி போலீசார் நேரில் ஆஜராகக் கோரி உத்தரவிட்டனர். அதன்பேரில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் முன்பு கடந்த சனிக்கிழமை தினகரன் ஆஜரானார்.
அவரிடம் 7 மணி நேரமாக நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு சுகேஷ் சந்தர் யாரென்றே தெரியாது என்று தினகரன் கூறியுள்ளார். இதனையடுத்து தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனன் அளித்த தகவல்களின் அடிப்படையில் தினகரனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஞாயிற்றுக் கிழமை 9 மணி நேரமும், திங்கட்கிழமை 13 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது. புரோக்கர் சுகேஷ் யாரென்றே தெரியாது என்றும் கேட்கப்பட்ட அனைத்து கேள்விக்கும் மழுப்பலாக பதில் அளித்துள்ளார் தினகரன்.
கடைசியாக செவ்வாய்க்கிழமையன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு ஆஜரான தினகரனிடம் சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டதோடு, ஏப்ரல் 16ம் தேதி சுகேஷிடம் 20 மணி நேரம் பேசியதற்கான தொலைபேசி உரையாடலையும் காட்டி விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து 37 மணிநேர விசாரணைக்கு பின்னர் நள்ளிரவில் டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவை கைது செய்துள்ளனர்.