திஹார் சிறைக்குப் போன 3வது தமிழக அரசியல்வாதி தினகரன்
டெல்லி: டெல்லி திஹார் சிறையில் அடைபடும் தமிழகத்தைச் சேர்ந்த 3வது அரசியல்வாதி டிடிவி தினகரன் ஆவார்.
டெல்லியில் அமைந்துள்ள திஹார் சிறை மிகப் பிரபலமானது. பிரமாண்ட சிறை மட்டுமல்லாமல் பல விஐபிகளின் வீடாகவும் இது விளங்கி வருகிறது.
இந்த சிறையில் பல புகழ் பெற்ற குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல பல முக்கிய பிரபலங்களும் கூட திஹார் சிறையில் வாசம் புரிகின்றனர், புரிந்துள்ளனர்.

தமிழக அரசியல்வாதிகள்
தமிழகத்திலிருந்தும் இந்த சிறையில் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் அரசியல்வாதிகள் என்று பார்த்தால் இதற்கு முன்பு இரு முக்கியப் பிரபலங்கள் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கனிமொழியும், ஏ. ராசாவும்.

2 ஜி வழக்கில் சிறை
2ஜி வழக்கில் இந்த இருவரையும் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கனிமொழி கிட்டத்தட்ட 6 மாதம் சிறையில் இருந்தார். ராசா 15 மாதம் சிறையில் இருந்தார்.

டிடிவி தினகரன்
இவர்கள் வரிசையில் தற்போது தினகரன் இணைந்துள்ளார். அதிமுக துணைப் பொதுச் செயலாளராக உள்ள டிடிவி தினகரன் முதல் முறையாக திஹார் சிறைக்கு வந்துள்ளார். திமுகவைத் தொடர்ந்து அதிமுக சிறைக்கு வந்துள்ளது.

விடுதலை கிடைக்குமா?
ராசா, கனிமொழி போல நீண்ட காலம் தினகரனும் சிறையில் இருப்பாரா அல்லது விரைவில் வழக்கிலிருந்து தப்புவாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவ்வளவு சீக்கிரம் தினகரனுக்கு விடுதலை கிடைக்காது என்றே கருதப்படுகிறது. மேலும் இந்த மூவரும் லஞ்சம், ஊழல் வழக்கில் சிக்கி சிறைவாசம் விதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது தமிழக அரசியல்வாதி
தமிழகத்திலிருந்து வேறு எந்த அரசியல்வாதியும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரியவில்லை. அந்த வரிசையில் கனிமொழி, ராசா மற்றும் தினகரன் ஆகியோர் மூலம் தமிழகத்திற்குப் புதிய "பெருமை" கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications