துர்க்கை குறித்துப் பேசியதற்காக.. டிவி தொகுப்பாளினியை போன் போட்டுத் திட்டிய 2000 பேர்.. 5 பேர் கைது!
திருவனந்தபுரம்: டிவி விவாத நிகழ்ச்சியில் மகிஷாசுர ஜெயந்தி பற்றியும், துர்க்கை பற்றியும் பேசிய டிவி தொகுப்பாளினிக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போன் செய்து மிரட்டியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் துர்க்கையை தவறாக பேசியதாக கூறி அவரை பலரும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளில் திட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பாதிப்பிற்கு ஆளான ஏசியாநெட் செய்திச் சேனலின் தொகுப்பாளினி சிந்து சூர்யகுமார் அளித்த புகாரின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் ராஜ்யசபாவில் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, பல்கலைக்கழக மாணவர்கள் இடையே விநியோகிக்கப்பட்ட ஒரு துண்டறிக்கையை வாசித்தார். அதில் துர்கா தேவி குறித்து தவறாக விமர்சனம் செய்யப்பட்டிருந்து. இது குறித்து தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஏசியா நெட் செய்தி தொலைக்காட்சியிலும் இது பற்றி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிந்து, அன்று இரவு முழுவதும் தனது தூக்கத்தை தொலைத்ததுதான் மிச்சம். ஆள் ஆளுக்கு போன் செய்து, சிந்துவை, விலைமாது, எனவும், பாலியல் தொழிலாளி எனவும் கொச்சையான வார்த்தைகளைப் பிரயோகித்து திட்டியுள்ளனர்.
இதனையடுத்து கேரளா போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ள நிலையில் இது சம்மந்தமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆர்.எஸ்.எஸ்.இந்து அமைப்பினர் மற்றும் ஸ்ரீ ராம சேனா அமைப்பையும் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. எனினும் பாஜக கட்சியைச் சேர்ந்த கேரள சீனியர் உறுப்பினர் கும்மனம் ராஜசேகரன் பாஜக எப்போதும் மீடியாக்களின் சுதந்திரத்தை ஆதரிக்கும் என அறிவித்துள்ளார். எனினும் அவர் சிந்துவுக்கு வரும் பிரச்னை குறித்து எதுவும் பேசவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
ஒரு டிவி விவாத நிகழ்ச்சிக்காக ஒரு பெண் தொகுப்பாளரை நபரை இப்படித் தரக்குறைவாக பேசி இடையூறு கொடுப்பது எப்படி நியாயமாகும் என பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் அவருக்கு ஆதரவுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் தரப்பில் சிந்து, அந்த நிகழ்ச்சியில் வெறும் மகிஷாசுர ஜெயந்தி பற்றி மட்டுமே பேசினார் என்றும், அவரது உரையாடல்களில் எந்த இடத்திலும் இந்துக் கடவுள்களை இழிவாகப் பேசவில்லை எனவும் உறுதியாக கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுபவர்களை சமூக வலைத்தளங்களில் வசைபாடுவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications