இந்த கிராமத்தில் எங்கு திரும்பினாலும் "மாற்றான்" கள்தான்... !
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள கோடினிகி என்ற கிராமத்தில் 500 ஜோடிகளுக்கு மேல் இரட்டையர்களாக உள்ளனர்.
கேரளாவில் மலப்புரத்திலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளது கோடினிகி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் பல குடும்பங்களில் உள்ளவர்கள் இரட்டையர்களாக உள்ளனர்.
உலகிலேயே மிக அதிகமான இரட்டையர்கள் வாழும் பகுதியாக இந்த கிராமம் உள்ளது. புள்ளி விவரங்களில் உலக அளவில் கூறப்பட்டுள்ளதை விட 6 மடங்கு அதிகமாக இரட்டையர்கள் இங்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.
500 இரட்டையர்கள்
இங்குள்ள இரட்டையர்கள் ஜோடிகளின் எண்ணிக்கை 500-க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சராசரியாக 15 இரட்டையர்கள் பிறப்பதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி பத்திரிகை, மற்றும் ஊடகங்களுக்கு தெரிந்ததையடுத்து இக்கிராமத்திற்கு அனைத்து மீடியாக்களும் படை எடுத்தன.
டாக்டர்கள் ஆய்வு
டாக்டர்களும், ஆராய்ச்சியாளர்களும் இந்த கிராமத்தை முற்றுகையிட்டு இரட்டை குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இது குறித்த தகவல்களை சேகரித்தனர். மேலும் இரட்டையர்கள் படிக்கும் பள்ளிகளுக்குச் சென்று அவர்களிடம் பேட்டி எடுத்தனர்.
1949ம் ஆண்டிலிருந்து
இதுபோன்று இரட்டையர்கள் அதிகமாக பிறக்கும் நிகழ்வு 1949-ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில் இருந்துதான் தொடர்ந்து வருவதாக அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
2 முதல் 70 வயது வரை
இங்கு 2 வயதில் இருந்து 70 வயது வரையிலான இரட்டையர்களை காண முடிகிறது. இதுகுறித்து பல்வேறு காரனங்களை கூறும் ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் இதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பேட்டி எடுக்க தடை
இதனால், இரட்டையர்களின் குடும்பத்தினருக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டனர். தங்களின் அனுமதியின்றி இரட்டையர்களை படம் எடுக்கவோ, பேட்டி எடுத்து பிரசுரிக்கவோ கூடாது என்று மனு கொடுத்தனர்.
அனுமதியோடுதான் போக முடியும்
அதனைத் தொடர்ந்து, கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் அனுமதியின்றி இனி யாரும் இரட்டையர்களை படம் எடுக்கவோ, பேட்டி எடுத்து பிரசுரிக்கவோ கூடாது என்று பஞ்சாயத்து தலைவர் முகம்மதுஹசன் உத்தரவிட்டார். பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் இரட்டையரின் குடும்பத்தினர் அனுமதித்தால் மட்டுமே ஊருக்குள் நுழைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.