12 மணிநேரத்தில் 2 ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கைது: மோடி மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்
டெல்லி: டெல்லியில் 12 மணிநேரத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பிரச்சனை பெரிதாகியுள்ளது.
டெல்லி ஜசோலா நகர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் தான் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மின் பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்க ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வும்.,வக்பு வாரிய தலைவருமான அமானத்துல்லா கானின் வீட்டிற்கு கடந்த 10ம் தேதி சென்றுள்ளார்.

அப்போது கானின் வீட்டில் இருந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை பார்த்து பேசாமல் வீட்டிற்கு செல் இல்லை என்றால் பலாத்காரம் செய்து, காரை ஏற்றி கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த பெண் வீட்டிற்கு செல்லும்போது அவரை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அந்த காரில் அமானத்துல்லா கான் இருந்ததாகவும் அவர் ஜாமியா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கானை முதலில் விசாரணைக்கு அழைத்துச் சென்று பின்னர் கைது செய்தனர். கானின் கைது திட்டமிட்ட சதி என டெல்லி முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலேரேகோட்லா பகுதியில் திருக்குர்ஆனை அவமதித்ததாக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் மீது அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து டெல்லியில் உள்ள நரேஷின் வீட்டில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
12 மணிநேரத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications