போலி ஆதார்.. பாகிஸ்தான், வங்கதேசம் பயணம்.. மே.வங்கத்தில் கைது செய்யப்பட்ட சீனர்கள்.. விசாரணை தீவிரம்
கொல்கத்தா: போலியான ஆதார் அட்டையுடன் விமானத்தில் செல்ல முயன்ற இரண்டு சீனர்கள் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள பாக்டோகிரா விமான நிலையத்திற்கு நேற்று இரண்டு பேர் வந்துள்ளனர். அவர்கள் தங்களை இந்தியர்களைப் போலவே காட்டிக்கொண்டனர். அங்கிருந்து விமானத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது அவர்கள் கொண்டு வந்த ஆவணங்களை அங்கிருந்த அலுவலர்கள் சரி பார்த்தனர். அதில் அவர்கள் வைத்திருப்பது போலியான ஆதர் அட்டை என்பது தெரியவந்தது.

போலி ஆதார் அட்டையுடன் சீனர்கள்
இதையடுத்து அவர்களை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை தடுப்பு காவலில் வைத்தனர். அவர்கள் சீனாவைச் சேர்ந்த ஜாங் ஜூன் (39), கைலேங் (42) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் வைத்திருந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம்
அவர்கள் கடந்த 3ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானின் கராச்சிக்கு சென்றுள்ளனர். மேலும், வங்கதேச தலைநகர் காத்மாண்டுவிற்கும் அவர்கள் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 15ஆம் தேதி வங்கதேச தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் ஒரு நகருக்கு இவர்கள் வந்துள்ளனர்.

சீனர்கள் கைது
அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்களுடன் பயணித்த இரண்டு நேபாளியர்களுடன் தங்கியுள்ளனர். ஆனால், அந்த இரண்டு நேபாளியர்களும் உடனடியாக வங்கதேசத்திற்குத் திரும்பிவிட்டனர். இந்த இரண்டு சீனர்களும் எந்த விமானத்தில் ஏற முயன்றனர் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும், தடுப்பு காவலில் வைக்கப்பட்ட சீனர்களை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை அப்பகுதியிலுள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தீவிர விசாரணை
இது குறித்து சிலிகுரியின் துணை போலீஸ் கமிஷனர் குன்வர் பூசன் சிங் கூறுகையில், "இந்த இரண்டு சீன குடிமகன்களின் ஆவணங்களில் முரண்பாடுகள் இருந்ததால் தடுப்பு காவலில் வைத்துள்ளோம். இப்போது அவர்கள் கொண்டுவந்த ஆவணங்களைச் சரிபார்த்து வருகிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகு, தேவையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணையைத் தொடங்குவோம்" என்றார்












Click it and Unblock the Notifications