மகாராஷ்டிராவில் பயங்கரம்.. பொது கிணற்றில் குளித்த தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்!
மகாராஷ்டிராவில் பொது கிணற்றில் குளித்த தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி உயர் சாதி வகுப்பினர் நடத்திய கொடூரத் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஜல்காவுன்: மகாராஷ்டிராவில் பொது கிணற்றில் குளித்த தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி உயர் சாதி வகுப்பினர் நடத்திய கொடூரத் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவுன் மாவட்டம் வகாடி என்ற கிராமத்தில் தான் அந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. வகாடி பகுதியில் ஊர் மக்கள் பயன்படுத்தும் பொது கிணறு ஒன்று உள்ளது.
இந்த கிணற்றை அப்பகுதி உயர் சாதி வகுப்பை சேர்ந்த மக்கள் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தலித் சிறுவர்கள் 2 பேர் அந்த கிணற்றில் குளித்ததாக தெரிகிறது.
நிர்வாணமாக்கி..
இதனைக் கண்ட உயர் சாதி வகுப்பு மக்கள் சகோதரர்களான அந்த 2 தலித் சிறுவர்களையும் தரதரவென கரைக்கு இழுத்து வந்துள்ளனர். பின்னர் அவர்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.
அடித்து துன்புறுத்தி
வளர்ந்த சிறுவர்களான அவர்கள் அவமானத்தில் கூனிகுருகி இலைகளை கொண்டு தங்களை மறைத்துள்ளனர். வழிநெடுகிலும் அவர்களை அடித்து துன்புறுத்தியபடி வந்துள்ளனர் அப்பகுதி உயர் சாதி மக்கள்.
பெல்ட்டால் தாக்கி
ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய நிலையில் சிறுவர்கள் என்றும் பாராமல் வீதியில் நிற்க வைத்து கம்பு மற்றும் பெல்ட்டால் தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். சிறுவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்திய அவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர்.
|
கடும் கண்டனம்
இந்த வீடியோவை குஜராத் சுயேட்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜூன் 10ஆம் தேதி
இத்தகைய கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த சம்பவம் ஜூன் 10ஆம் தேதி அரங்கேறியுள்ளது.
வெட்ட வெளிச்சம்
வைரலாகும் வீடியோவால் அந்த சம்பவம் தற்போது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.