தீயை அணைக்கப் போய் கட்டிட இடிபாட்டில் சிக்கிப் பலியான 2 தீயணைப்பு வீரர்கள்!
மும்பை: மும்பையில் பழமை வாய்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள் இரண்டு பேர், எதிர்பாராத விதமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
மும்பை கல்பாதேவி பகுதியில் கோகுல் நிவாஸ் என்ற 100 ஆண்டு பழமை வாய்ந்த 4 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. பராமரிப்பு பணி நடைபெற்று வரும் இந்த கட்டிடத்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 17 வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ மளமளவென பரவியதால், 10 தண்ணீர் வாகனங்களைக் கொண்டு தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 2 தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அந்த இரண்டு தீயணைப்பு வீரர்களும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் தீயணைப்பு தலைமை அதிகாரி, உதவி அதிகாரி உள்பட 8 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications